39 இடத்திலும் வெற்றி.. திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு எப்படி இருக்கும்? கார்த்தி சிதம்பரம் பதில்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு எப்படி முடிவுக்கு வரும் என்பது பற்றி கார்த்தி சிதம்பரம் எம்பி விளக்கி உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இந்தி, இந்துத்துவா அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வந்து செல்லலாம் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவிடம் காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ளனர். கடந்த முறை தமிழகத்தில் 9 தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது.

அந்த வகையில் வரும் தேர்தலில் தமிழகத்தில் 10 மற்றும் புதுச்சேரி என 11 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக 8 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வருவதாக கூறப்படுகிறது. இதனால் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் தான் புதுக்கோட்டையில் இன்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சியை முந்தி பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பற்றியும், காங்கிரஸில் தொகுதி பங்கீட்டில் நிலவும் இழுபறி பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே வேட்பாளர் அறிவிப்பதன் மூலம் முந்தி போகிறார்கள் என்ற அர்த்தம் இல்லை. அனைவருக்கும் ஒன்றாக தான் தேர்தல் நடக்கும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் உறவ நீண்ட நாள் உறவாகும். நிலைத்து இருக்கும் உறவாகும். இது திருப்திகரமானதாக இருக்கும். தொகுதி பங்கீடு என்பது சுமூகமாக முடிக்கப்படும். பேச்சுவார்த்தையின் மூலம் தொகுதி பங்கீட்டில் முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் தான் உள்ளது. இந்த தொகுதியை தான் அனைத்து கட்சிகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும். அதனை திமுக சிறப்பாக செய்யும். மாநிலத்தில் திமுக-காங்கிரஸ் என்பது வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி 39 தொகுதிகளிலும் வெல்லும். அதிமுக அந்த கட்சியை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு மக்கள் இந்தி, இந்துத்துவா அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம். அவர் இந்திய பிரதமர். எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம்'' எனக்கூறினார். கார்த்தி சிதம்பரம் தற்போது சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் சிவகங்கையில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் களமிறங்க நினைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் சிவகங்கையை திமுக கூட்டணியிடம் கேட்டுள்ளது.
இதற்கிடையே தான் சிவகங்கையில் திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அம்மாவட்ட திமுகவினரும், காங்கிரஸில் ஒரு பிரிவினர் சிவகங்கையில் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications