கடவுளே வந்தாலும் சீட்டை அதிகரிக்க முடியாது! இருப்பதை தான் பிரிக்க வேண்டும் -கார்த்தி சிதம்பரம்
புதுக்கோட்டை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுகவும் காங்கிரசும் இருக்கிற இடங்களை தான் பகிர்ந்துகொள்ள வேண்டுமே தவிர, கடவுளே வந்தாலும் இடங்களை அதிகரிக்க முடியாது என கூறியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
திமுக -காங்கிரஸ் இடையே இழுபறியில் உள்ள பேச்சுவார்த்தையை சுமூகமாக்க காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா நேற்று சென்னை வந்துள்ள நிலையில் அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
மேலும், திமுக -காங்கிரஸ் நிர்வாகிகள் அதிக இடங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என விரும்புவது இயல்பான ஒன்று தான் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் திமுக -காங்கிரஸ் இடையேயான இடப்பங்கீடு இழுபறியாகவே உள்ளது. ப.சிதம்பரத்தின் சொந்த மாவட்டம் என்பதால், சிவகங்கையில் அதிக சீட்களை காங்கிரசுக்கு பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம். இதற்கு திமுக மாவட்டச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

அதிக இடங்கள்
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் அக்கட்சியை சேர்ந்தவர்கள் அதிக இடங்களில் தாங்கள் போட்டியிட வேண்டும் என நினைப்பதாகவும் இதில் தவறேதும் இல்லை எனவும் தெரிவித்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் தாங்கள் அதிக இடங்களில் தேர்தலில் நிற்க வேண்டும் என விரும்புவது இயல்பான ஒன்று என்றும் இடப்பங்கீட்டில் காரசாரமான வாதங்கள் நடப்பதும் போட்டிகள் இருப்பதும் புதிதல்ல என கார்த்தி சிதம்பரம் கூறினார்.

கடவுள் வந்தாலும்
ஏற்கனவே இருக்கிற இடங்களை தான் திமுகவும் காங்கிரசும் பிரித்துக்கொள்ள முடியுமே தவிர மற்றபடி கடவுளே வந்தாலும் இடங்களை அதிகரிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். திமுக -காங்கிரஸ் பேச்சுவார்த்தையை சுமூகமாக்க ரமேஷ் சென்னிதாலா சென்னை வந்துள்ள சூழலில் கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை குழு
திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் குழுவில், சிவகங்கை மாவட்ட தலைவராக இருப்பவர் கார்த்தி சிதம்பரம். சிவகங்கை, கரூர், ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே திமுக -காங்கிரஸ் தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications