கமகமக்கும் கறிக்குழம்பு! சுண்டியிழுக்கும் குடல் கிரேவி! கொட்டும் பணமழை! மொய் விருந்து அமர்க்களம்!
புதுக்கோட்டை: ஆடி மாதம் வருவதற்கு முன்னரே புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மொய் விருந்து களைக்கட்டத் தொடங்கிவிட்டது.
கமகமக்கும் கறிக்குழம்பு, சுண்டியிழுக்கும் குடல் கிரேவி, அவித்த முட்டை, சுடச்சுட வெள்ளை சாதம் என மொய் விருந்தில் ஏராளமான அசைவ உணவு பண்டங்களை இந்த விருந்தில் பார்க்க முடிகின்றன. ஆண்டுதோறும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மொய் விருந்து நடத்தப்படுவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.

35 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு லட்சம் மொய் சேர்ந்தாலே அது பெரும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்ட நிலையில் இன்று சர்வ சாதாரணமாக கோடிகளிலும், பல லட்சங்களிலும் மொய் வசூலாகி வருகிறது. மொய் விருந்துக்கு வருபவர்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மொய் செலுத்துகிறார்கள். இதனை ஒரு வட்டியில்லா கடன் என்று கூட சொல்லலாம்.
கொரோனா காரணமாக கடந்த 2020, 2021, ஆகிய இரண்டு ஆண்டுகளும் மொய் விருந்துகள் நடக்கவில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு மொய் விருந்துகள் நடைபெற்றாலும் இந்தாண்டு காணப்படுவதை போன்ற ஒரு உற்சாகமோ, அமர்க்களமோ சென்றாண்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள உறவுமுறைகளையும், நண்பர்களையும் கை தூக்கிவிடும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து மொய் விருந்துகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மொய் விருந்துகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு யாரிடமும் கடன் பெறாமல் தொழில் தொடங்கி வெற்றிக்கண்டவர்கள் ஏராளம். மொய் விருந்தை மேலோட்டமாக பார்க்கும் போது அது வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் தெரிந்தாலும் அதன் பயனும், நன்மையும் அதனை உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
மொய் விருந்துகள் மூலம் சமையல்காரர்கள், மளிகைக்கடை காரர்கள், பந்தல்காரர்கள், ஒலி பெருக்கி ஏற்பாட்டாளர்கள், அரிசி வியாபாரிகள், ஆட்டுக்கறி விற்பனையாளர்கள், மொய் எழுத்தர்கள், பந்தல் அலங்கார வடிவமைப்பாளர்கள், விறகு விற்பவர்கள், பிளக்ஸ் தயாரிப்பாளர்கள், என பல தரப்பட்டோரும் பயன் அடைந்து வருவாய் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications