"இன்புளுயன்ஸா மட்டுமில்லை.. பன்றிக்காய்ச்சலும் தமிழகத்தில் பரவுகிறது.." பகீர் கிளப்பிய விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கியது முதலே காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்புளுயன்ஸா காய்ச்சல் பரவுவதால் மக்கள் மருத்துவமனைகளில் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.
இன்புளுயன்ஸா காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் பருவமழை காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது சகஜம் தான் என்றும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இன்புளுயன்ஸா..1000 இடங்களில் காய்ச்சல் முகாம்..அசால்ட்டாக இருக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
விஜயபாஸ்கர்
இந்தச் சூழலில் புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சில பகீர் கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற கவிஞர் கண்ணதாசன் சாரல் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் பரவும் காய்ச்சல் குறித்தும் விளக்கினார்.
பன்றி காய்ச்சல்
அவர் கூறுகையில், "தமிழகத்தில் பல மாவட்டங்களில் H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் வேகமாக அதிக அளவில் பரவி வருகிறது. ஆனால், தமிழக அரசு இதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதை அரசு மறைக்க முயல்வது வேதனை தருவதாக உள்ளது. சென்னை எழும்பூர் மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் காய்ச்சலால் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அவர்கள் சிகிச்சை பெற உரியப் படுக்கை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.
வல்லுநர் குழு
இது மட்டுமின்றி டெங்கு, இன்புளுயன்ஸா உள்ளிட்ட பல வகையான காய்ச்சலும் பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு நாம் அதிக கவனமாக இருக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளதால் நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதன் காரணமாகத் தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் பதற்றத்துடன் தான் இருக்கிறார்கள். காய்ச்சல் அதிகமாக உள்ள மாவட்டங்களுக்குத் தமிழக அரசு உடனடியாக வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும்.
குற்றச்சாட்டு
அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சிகிச்சை முறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி தமிழகத்தில் சில வகை மருந்துகளுக்குத் தட்டுப்பாடு உள்ளதாகச் சுகாதாரத் துறை அலுவலர்களே ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த உண்மை தகவலை மறுப்பதை விடுத்துவிட்டு, அமைச்சர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை தேவை
அதிக காய்ச்சல் காரணமாகப் புதுச்சேரியில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் நிலைமையை ஆய்வு செய்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அதை மறைப்பதற்குப் பதிலாகக் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் மர்மக் காய்ச்சல் என்று ஒரே வார்த்தையில் கூறி விட முடியாது
மருத்துவர்கள், செவிலியர்கள்
நான் மருத்துவத் துறை அமைச்சராக இருந்தபோது, இப்படிப் பல சவால்களைச் சரி செய்துள்ளேன். கடந்த அதிமுக ஆட்சியில் எட்டு ஆண்டுகளில் மட்டும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் நேர்மையாகத் தேர்வு செய்யப்பட்டன. இப்போதும் அந்த பணி தொடர வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தால் கல்லூரிகளிலும் காய்ச்சல் வார்டு ஏற்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.