30 ஆண்டு காத்திருந்தும் அரசியலுக்கு வராத ரஜினி! பொறுத்தது போதும்.. முதல் முறையாக ஓட்டு போட்ட ரசிகர்!
புதுக்கோட்டை: 30 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டையை சேர்ந்த ரஜினி ரசிகர் வாக்களித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தார்கள். இதை ஏற்காமலேயே ரஜினி இருந்து வந்தார். படையப்பா படத்தில் கூட அவரது வீட்டில் அவருக்கு பிறந்த நாள் விழாவின் போது அரசியல்வாதி ஒருவர் ரஜினியை அரசியலுக்கு அழைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.
அப்போது ரஜினி, "ஏன் நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா" என கேட்பார். அதற்கு அந்த அரசியல்வாதி, "இப்படியே எதையாவது சொல்லி தப்பிச்சிடுப்பா" என்பார். இப்படியாக ரஜினியை அரசியலுக்கு அழைத்த ரசிகர்களுக்கு எல்லாம் தற்போது பேரன் பேத்தியே வந்துவிட்டார்கள் என சிலர் கிண்டலுக்காக சொல்வதுண்டு.

வாழ வைத்த மக்கள்
தன்னை வாழவைத்த மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்து ரசிகர்களுக்கு 2018ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு பரிசை கொடுத்தார்.

அண்ணாத்த படப்பிடிப்பு
இதையடுத்து அவர் இப்போது தொடங்குவார், அப்போது தொடங்குவார் என எதிர்பார்த்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பின் போது ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டார். தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் காட்டமாக ஒரு அறிக்கையை ரஜினிகாந்த் வெளியிட்ட பிறகுதான் ரசிகர்களை அமைதி காத்தனர்.

ரஜினி அரசியலுக்கு வருவார்
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து ஏமாற்றமடைந்த ரசிகர் ஒருவர் 30 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக வாக்களித்தார்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (48). இவர் ரஜினிகாந்த் ரசிகர். பள்ளியில் படிக்கும் காலம் முதலே ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.

முதல் வோட்டு ரஜினிக்குத்தான்!
ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தனது முதல் வாக்கை செலுத்துவது என விடாப்பிடியாக இருந்து வந்தார். தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டப்போது கூட மகேந்திரன் வாக்கை செலுத்தவில்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2016ஆம் ஆண்டில் அறிவித்தார். இதனால் மகேந்திரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நடிகர் ரஜினியின் கட்சிக்கு தனது முதல் வாக்கை செலுத்த அவர் காத்திருந்தார்.
Recommended Video


முதல்முறையாக வாக்களித்த ரஜினி ரசிகர்
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தது மகேந்திரனுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில் 30 ஆண்டுகள் கழித்து தனது முதல் வாக்கை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அளித்துள்ளார் மகேந்திரன்.












Click it and Unblock the Notifications