வேங்கைவயல்.. முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சனை புதுக்கோட்டை கோர்ட் இன்று விடுவிக்குமா? பரபரப்பு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை இன்று மே 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. வேங்கைவயல் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இவ்வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியையும், பரபரப்பையும் தமிழகம் முழுதும் ஏற்படுத்தியது.

வேங்கைவயல் விவகாரம்
இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்திய பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அறிவியல் ரீதியாக ஆதாரங்கள், தடயங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்தனர்.
அத்துடன், கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி இந்த வழக்கின் குற்றப்பத்திரியை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கில் இருந்த வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவும் நீக்கம் செய்யப்பட்டது.
எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 12ம் தேதி குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்கள் மூன்று பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டு மார்ச் 20-க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது எங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால், தங்களை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று 3 பேருமே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு பதிலளிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை கடந்த ஏப்ரல் 3ம்தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. ஆனால், ஆதாரங்கள் வலுவாக உள்ளதால், அவர்களை விடுவிக்கக்கூடாது என்று சிபிஐடி தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு கடந்த 23ம் தேதி புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது..
இன்று விசாரணைக்கு வருகிறது
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஆஜரான நிலையில், இந்த வழக்கு விசாரணையை மே 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நீதிபதி ஜி.அற்புதவாணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படியே இன்று இது விசாரணைக்கு வரஉள்ளது.. வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் உள்ளிட்ட 3 பேரையும், இந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவிக்குமா? விடுவிக்காதா? என்பது இன்றைய விசாரணையில் தெரியவரும். எனவே, இந்த வழக்கின் எதிர்பார்ப்பு இன்று கூடியிருக்கிறது.












Click it and Unblock the Notifications