அந்த பயலே.. கிளாஸ்ல டீ வேணுமா? புதுக்கோட்டையை விடாத “ஜாதி” பேய்! ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட தலித்துகள்
புதுக்கோட்டை: கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்தது, இரட்டை குவளை முறை பின்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதே புதுக்கோட்டை மாவட்டம் மங்களநாடு கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு கிளாஸில் தேநீர் வழங்க மறுத்து இழிவான சொற்களை கொண்டு திட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவிஞர் பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று அன்று பாடிவிட்டு சென்றார். மறுபக்கம் சாதி சான்றிதழை ஒழித்தால் சாதியை ஒழித்துவிடலாம் என்று சினிமாக்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு கூட்டம் பேசி வருகிறது.
"தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்" என்ற வரிகள் பல ஆண்டுகளாக பாடபுத்தகங்களில் தவறாமல் இடம்பெற்று உள்ளன.
தயவு தாட்சண்யமே கிடையாது.. தீண்டாமை கொடுமை வழக்கு எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது - அமைச்சர் உறுதி
சாகாத சாதி பாம்பு
ஆனால், அதை பலர் உணர்ந்து திருந்தவில்லை என தற்போது நடந்துவரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா என பல போராளிகளின் உழைப்பால் சாதி என்ற விஷத்தின் வீரியம் சற்று தணிந்து இருந்தாலும், சாதி என்ற விஷப்பாம்பு இன்னும் சாகவில்லை என்பதை உண்மை.
நீர் தேக்க தொட்டியில் மலம்
அந்த வகையில்தான் கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் என்ற கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் நீர்தேக்க தொட்டியில் மலம் கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய சென்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதாகவும், இரட்டை குவளை முறை தொடர்வதாகவும் தலித் மக்கள் புகார் அளித்தனர்.
4 பேர் கைது
இதனை தொடர்ந்து சாமியாடிய பெண், இரட்டை குவளை முறையை கடைபிடித்த தேநீர் கடைக்காரர் உட்பட 4 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். துணிச்சலான நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் புதுக்கோட்டை எஸ்பியை பலரும் பாராட்டினார்கள்.
அறந்தாங்கி அருகே சாதி கொடுமை
இனியாவது அந்த மாவட்டத்தில் உள்ள சாதி வெறியர்கள் சற்று அடங்குவார்கள் என்று நினைத்தால், அதுதான் இல்லை. இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்காக மங்களநாடு கிராமத்தில் நிலவும் சாதிய கொடூரத்தை உணர்த்தும் வகையில் ஒரு பகீர் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரட்டை குவளை முறை
மங்களநாடு பகுதியில் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீக்கடையில் தேநீர் கேட்டபோது, அதன் உரிமையாளர் பேப்பர் கப்பில் அதை கொடுத்து இருக்கிறார். அதற்கு அந்த இளைஞர் கிளாஸ் இல்லையா என்று கேட்க, கிளாஸ் கழுவாம இருக்குடா என்று டீக்கடைக்கார பதிலளித்து உள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள் கிளாசை கழுவி தர வேண்டியதுதானே? நான் காத்திருக்கிறேன். கிளாசில் தருவீர்களா? என்று கேட்கிறார்.
ஆபாசமாக பேசிய பெண்
இதை கேட்ட டீக்கடைக்காரரின் மனைவி, டீ இல்லைனு சொல்லுங்க என்று சொல்லி ஆபாசமான வார்த்தையில் பேசினார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த அதிகாரியிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள், யாராலும் என்னை எதுவும் செய்ய முடியாது என அந்த பெண் பேசி இருக்கிறார்.
போலீசார் மீது புகார்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் ROOTS TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், உயர்சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார். தேனீர் கடைகளில் மற்ற சாதியினர் டேபிளில் அமர்ந்து டீ குடிப்பதாகவும் பட்டியலின மக்களை மட்டும் கீழே அமர்ந்து டீ குடிக்க வைப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.
பொருட்கள் விற்க தடை
இது தொடர்பாக தாசில்தார் வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்த நிலையில், தலித் மக்களுக்கு கடைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது என்று ஊர் மக்கள் முடிவு செய்து உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து இதனை கடைபிடித்து வருகிறார்கள். இதனால் அருகே உள்ள ஊர்களுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகிறோம்.