15 நாளா தண்ணீர் வரல! மாலை வரை கெடு! அப்புறம் நானே ரோட்டில் உட்கார்ந்துடுவேன்! எச்சரித்த விஜயபாஸ்கர்!
புதுக்கோட்டை: இன்று மாலைக்குள் விராலிமலை மக்களுக்கு குடிநீர் வராவிட்டால் தாமே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என எச்சரித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
15 நாட்களாக தண்ணீர் வரவில்லை என மக்கள் சொல்கிறார்கள், என்னா விளையாடுறீங்களா எனக் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியை போனிலேயே வறுத்தெடுத்துள்ளார். தீபாவளி நேரத்தில் போராட்டம் செய்து அது பெரிய பிரச்சனையாகி விடும் எனக் கருதிய அந்த அதிகாரி இன்று மாலைக்குள் விராலிமலை மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதாக கூறியுள்ளார்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் தருகிறோம் என சட்டசபையில் மட்டும் அமைச்சர் பேசினால் போதுமா, தண்ணீர் எங்கே என போனில் ஸ்பீக்கர் போட்டபடி பேசினார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். இவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அந்த அதிகாரி, ஒரு கட்டத்தில் அண்ணே தண்ணீர் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம், கொடுத்திடலாம்ணே என சரண்டர் ஆனார்.
தனது தொகுதியான விராலிமலை மீது மட்டும் எப்போதும் தனிக்கவனம் செலுத்தக் கூடியவர் விஜயபாஸ்கர். அமைச்சராக இருந்த காலத்திலேயே துறை சார்ந்த ஆயிரம் பணிகள் இருப்பினும் விராலிமலை தொகுதிப் பணிகளுக்கு என வாரத்தில் ஒரு நாளாவது ஒதுக்கிக் கொள்வார். அதேபோல் வேறு ஊரில் எப்படியோ தெரியாது, விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் போன்ற பகுதிகளில் நான் உங்கள் வீட்டு பிள்ளை என்கிற கெட்டப்பில் எளிமையாக எல்லோருடனும் பேசி பழகுவார்.
தனது தொகுதியிலிருந்து யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தவறாமல் சென்று வந்துவிடுவார். இந்த பாண்டிங் தான் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அவரை ஹாட்ரிக் வெற்றி பெற வைத்தது. விராலிமலையில் விஜயபாஸ்கரை வீழ்த்திவிடலாம் என திமுக தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொண்டும் தொடர்ந்து தொகுதியை தக்க வைத்து வருகிறார். இதற்கு காரணம் குடிதண்ணீர் பிரச்சனை போன்ற மைக்ரோ அளவிலான பிரச்சனைகளில் கூட கவனம் செலுத்துவதேயாகும்.












Click it and Unblock the Notifications