அழகான சின்ன தேவதை.. அவள்தானே எங்கள் புன்னகை.. இந்தியா முழுவதும் இந்த நிலை எப்போது வரும்?
புனே: புனேவில் தங்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று உற்சாக வரவேற்பு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்கும் நிலை இந்தியா முழுவதும் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் அதனை படிக்க வைத்து, சீர் செய்து, அதற்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு சீர் செய்து இப்படியே பெற்றவர்களின் ஆயுளே மாண்டுவிடும் என மோசமான எண்ணம் பலருக்கு உள்ளது.
இதனால் கருவில் இருக்கும் குழந்தையை ஆணா பெண்ணா என கண்டறிந்து அது பெண்ணாக இருந்தால் அதை அழிக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. இதையடுத்துதான் கருவில் இருப்பது ஆணா , பெண்ணா என்பதை சோதனை செய்யக் கூடாது என்ற ஒரு சட்டம் வந்தது.

குழந்தை பிறக்கும் வரை
இதனால் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கும் சிலர் அது ஆணாக இருந்தால் உற்சாகமாக வரவேற்பதும் பெண்ணாக இருந்தால் தலையில் கையை வைப்பதும் என இருந்தனர். சில இடங்களில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் செயல்கள் எல்லாம் நடந்துள்ளது.

ஆண் குழந்தை
பொதுவாக ஆண் குழந்தை பிறப்பது என்பது முழுக்க முழுக்க ஆணின் குரோமோசோம்களை பொருத்தே அமைகிறது. பெண்ணின் இரு எக்ஸ் குரோமோசோம்களும் ஆண்களுக்கு எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் உள்ளன. இதில் இருவரிலிருந்து ஒரு ஒரு குரோம்சோம்கள் இணைவதே குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கிறது.

ஆண் குழந்தை பிறக்க
அந்த வகையில் ஆண் குழந்தை பிறக்க எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் அவசியம். அது ஆண்களுக்கு மட்டுமே இருக்கிறது. இது தெரியாமல் ஆண் வாரிசை எதிர்நோக்கி ஆண்டுதோறும் மனைவியை கர்ப்பமாக்கும் கணவன் மார்களும் அவரது தாய், சகோதரிகளும் தொடர்ந்து பெண்ணே பிறந்தால் அதை பெற்றெடுத்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே துரத்தும் சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

விழிப்புணர்வுகள்
இது கால போக்கில் பல்வேறு விழிப்புணர்வுகள், தண்டனைகளுக்கு பிறகு இன்று பெண் குழந்தைகளை வரவேற்கும் அளவுக்கு போயுள்ளது. ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையாவது வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் வரை சமாளிக்க அரசு சார்பில் நிறைய திட்டங்கள் வந்துவிட்டன. இதனால் பெண் குழந்தைகளுக்கான எதிர்ப்புகள் குறைந்துள்ளன.

புனேவில் ஷெல்கான்
அந்த வகையில் புனேவில் ஷெல்கான் எனும் இடத்தை சேர்ந்தவர் விஷால் ஜாரேகர். இவர் குடும்பத்தில் ஒருவருக்கு கூட பெண் குழந்தையே இல்லை. இந்த நிலையில் இவரது மனைவி கர்ப்பம் தரித்தார். அவரது வீட்டில் அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என ஆவலாக இருந்தார்.

ரூ 1 லட்சம்
பிரசவ தேதியும் நெருங்கியது, பிரசவ வலியும் வந்தது. போய் பார்த்தால் பெண் குழந்தை. ஒட்டுமொத்த குடும்பமே உற்சாகத்தில் துள்ளி குதித்தது. தங்கள் குடும்பத்திலேயே ஒரு பெண் குழந்தை கூட இல்லாத நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால் அக்குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து சென்றனர். இதற்காக மட்டுமே ரூ 1 லட்சம் செலவு செய்தனர். அந்த குழந்தைக்கு ரியா என பெயர் சூட்டியுள்ளார்கள். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண் சிசு கொலை, பெண் பாலின பாகுபாடு, வரதட்சிணை கொடுமை உள்ளிட்டவை விரட்டியடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் பெண்களை போற்றும் நிலை இந்தியா முழுவதும் வர வேண்டும். இது எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் எல்லாரையும் போல் நாமும் இருப்போம்.












Click it and Unblock the Notifications