ஓபிஎஸ் Vs 4 "ஓபிஎஸ்"+ "எம்.பன்னீர் செல்வம்"! ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் 6 சுயேச்சைகள்.. சுவாரஸ்யம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில் அவருக்கு போட்டியாக அதே பெயரில் அதே இனிஷியலில் இதுவரை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று 6 ஆவதாக எம்.பன்னீர் செல்வம் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல செய்வது கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் என 400- க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது போல் அன்றைய தினமே உசிலம்பட்டி தாலுக்கா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஓச்சப்பன் மகன் பன்னீர் செல்வம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இது ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலை உள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளரும் சுயேச்சை என்பதால் சின்னங்கள் ஒதுக்கீடு என்பது வேட்புமனு ஏற்கும் நாளன்றுதான் தெரியவரும். இருவரும் சுயேச்சைகள் என்பதால் சின்னத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் ஓபிஎஸ்.
இந்த நிலையில் ஓபிஎஸ் என்ற ஒரே பெயர் இனிஷியலில் மேலும் 3 பேர் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனராம். நேற்று மட்டும் மதுரையை சேர்ந்த 3 பேர் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் வேட்புமனு செய்துள்ளனராம். அதில் ஒருவர் தெற்காட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வம்.
எனவே தற்போது களத்தில் 5 ஓபிஎஸ்கள் இருந்தனர். இந்த நிலையில் வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்று உசிலம்பட்டியை சேர்ந்த எம்.பன்னீர் செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது ஓபிஎஸ் அணிக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
ஓபிஎஸ் வெற்றியை சிதறடிக்கவே எடப்பாடி பழனிசாமி இது போல் ஆட்களை களமிறக்குவதாக அவருடைய மகன் பிரதீப் குற்றம்சாட்டினார். ராமநாதபுரம் மக்களை முட்டாளாக்க இது போல் ஒரு யுத்தியை அவர் எடுத்திருக்கிறார் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
நடந்தது என்ன: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றார் ஓபிஎஸ், அப்போது அவர்களிடம் இரு தொகுதிகளை கேட்ட நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு மறுத்தார். 2 தொகுதிகள் வேண்டுமானால் தாமரை சின்னம், சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியென்றால் ஒரு தொகுதிதான் என பாஜக கூறிவிட்டதாம்.
இதனால் ஓபிஎஸ் தனி சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். இதற்காக ராமநாதபுரத்தை அவர் தேர்வு செய்துள்ளார். எடப்பாடி தலைமையிலான அதிமுக இந்த தேர்தலில் வெல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எப்படியாவது தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என ஓபிஎஸ் போட்டியிடுகிறார்.
ஆனால் அவருக்கு சோதனையாக மேலும் 4 பேர் அதே பெயர் இனிஷியல் கொண்டவர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே பதவி போய், கட்சி போய், பல முறை நீதிமன்றங்களுக்கு சென்றும் ஒரு பயனும் அளிக்காத நிலையில் இது போன்ற ஒரு சிக்கலால் ஓபிஎஸ் வேதனையில் இருக்கிறாராம்.
ஒரு வேளை ஓபிஎஸ்ஸை எப்படியாவது தோற்கடிக்க அதிமுகவினர் யாராவது ஓபிஎஸ் என்ற பெயர் கொண்டவர்களை தேடி தேடி பிடித்து அனுப்புகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நல்ல வேளை இன்றுடன் வேட்புமனு முடிந்துவிட்டது. இல்லாவிட்டால் 10 ஓபிஎஸ்ஸாவது வந்திருப்பார்கள் போல! கடந்த சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் போட்டியிட்டார். அப்போது ராமசந்திரன் என்ற பெயரில் 6 பேர் சுயேச்சையாக போட்டியிட்டனர். அதுவே இதுவரை நடந்த தேர்தலில்களில் ஒரே பெயரில் போட்டியிட்ட அதிக நபர்கள் என்ற சாதனையை பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications