அண்ணனை பார்த்து பல நாளாச்சு.. இப்ப எதுல இருக்கீங்க? அன்வர் ராஜாவை கிண்டலடித்த நவாஸ் கனி எம்.பி.!
ராமநாதபுரம்: இப்போதும் தாம் அதிமுகவில் தான் இருப்பதாகவும் அதில் என்ன சந்தேகம் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்திருக்கிறார்.
'அண்ணனை பார்க்கவே முடியல, இப்ப எதுல இருக்கீங்க?' என அன்வர் ராஜாவை நோக்கி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி கேள்வி எழுப்பி கிண்டலடித்த நிலையில் அவர் மேற்கண்ட பதிலை கூறியிருக்கிறார்.
அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட நிலையிலும் தாம் இன்னும் அதிமுகவில் தான் இருப்பதாக அன்வர் ராஜா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அன்வர் ராஜா
அதிமுகவில் எம்.ஜி.ஆர்.காலத்து சீனியரான ராமநாதபுரம் முன்னாள் எம்.பி.அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து கட்டம் கட்டி வெளியேற்றினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பல மாதங்களாக மவுனம் காத்து வரும் இவர், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உட்பட யாரையும் சந்திக்கவில்லை. இதனிடையே இவர் திமுகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வலம் வந்தன. ஆனால் அங்கு அமைச்சர் ராஜக்கண்ணப்பன், மாவட்டச் செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் அன்வர் ராஜாவுக்கு பச்சைக் கொடி காட்டாததால் அவரால் அங்கும் செல்லமுடியவில்லை.

நவாஸ் கனி கிண்டல்
வீட்டில் புத்தகங்கள் படிப்பது, அன் அஃபிசியலாக அதிமுக பிரமுகர்களை சென்னையில் சந்தித்து பேசுவது என காலத்தை ஓட்டி வரும் அன்வர் ராஜா, அதிமுக கரை வேட்டி கட்டுவதை மட்டும் கைவிடவில்லை. இந்தச் சூழலில் நேற்று பள்ளிவாசல் திறப்பு விழாவில் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்ட நவாஸ் கனி எம்.பியும், அன்வர் ராஜாவும் ராமநாதபுரம் தொகுதிப் பணிகள் பற்றி பேசினர். அப்போது அன்வர் ராஜாவை கிண்டலடிக்கும் விதமாக அண்ணே இப்ப எதுல இருக்கீங்க என நவாஸ் கனி எம்.பி. வினவினார்.

அன்வர் ராஜா பதில்
அதற்கு வேகமாக பதிலளித்த அன்வர் ராஜா, இப்போதும் தாம் அதிமுகவில் தான் இருப்பதாகவும் அதில் என்ன சந்தேகம் எனவும் கூறினார். இதன் மூலம் எடப்பாடி தன்னை விலக்கி வைத்தாலும் கூட தாம் ஒரு அதிமுககாரர் என்பதை அவர் உணர்த்தியுள்ளார். மீண்டும் கட்சியில் இணைய முயற்சி சில மாதங்கள் முயற்சி செய்த அன்வர் ராஜா, இப்போது அந்த முயற்சியையே கைவிட்டுள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.

சமகால அரசியல்
இதனிடையே மேலும் சிலர் சமகால அரசியல் குறித்து பேசி அன்வர் ராஜாவின் வாயை கிளறினர். ஆனால் அது குறித்து பேசுவதை தவிர்த்துக் கொண்ட அவர், பள்ளிவாசல் திறப்பு விழாவில் மதநல்லிணக்கத்தை பற்றி மட்டும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications