பொது சிவில் சட்டம்! ஜமாத் அமைப்புகள் முதலில் இதைச் செய்யணும்! தமிமுன் அன்சாரி பேச்சு!
ராமநாதபுரம்: நாட்டை எப்போதுமே பதற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு விரும்புவதாகவும் பொது சிவில் சட்ட விவகாரத்தை பக்குவமாக உணர்ச்சிவசப்படாமல் அணுக வேண்டும் எனவும் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்ட ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் 'No Need Common Civil Code' என எதிர்ப்பை பதிவிடுமாறும் வெள்ளிக்கிழமை ஜும்மாவின் போது இது குறித்து ஜமாத் அமைப்புகள் எடுத்துக் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் பேசியதாவது;
"நாடு இன்று நெருக்கடியான சூழலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மதவாதம் ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக உள்ளது. இவற்றின் மீது மக்களின் கவனம் குவிந்து விடக்கூடாது என்பதற்காக, மக்கள் கவனத்தை திசை மாற்றும் சூழ்ச்சிகளை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், வலதுசாரிகளும் செய்கிறார்கள்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சத்தை செலுத்துவோம் என்றார்கள்.இதை ஏன் செய்யவில்லை? என கேட்கக் கூடாது என்பதற்காகத்தான் இப்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் 'பொது சிவில் சட்டத்தை' கொண்டு வருவோம் என்கிறார்கள்.
நாட்டை பதட்டத்திலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். நாடு சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகளிலிருந்து மக்கள் கவனத்தை மதவாதத்தின் பக்கம் திருப்புவதே அவர்களின் நோக்கமாகும். இதை கவனத்தில் கொண்டு நாம் இப்பிரச்சனைகளை பக்குவமாக, உணர்ச்சிவசப்படாமல் அணுக வேண்டும்.
திருமணம், விவாகரத்து, சொத்து பகிர்வு, குழந்தை தத்தெடுத்தல், வழிபாட்டுரிமை, வக்பு சொத்து பராமரிப்பு ஆகியவை மட்டும் தான் முஸ்லிம்களுக்கு சிவில் சட்டத்தில் விதிவிலக்கு உள்ளது.இதுபோல் மற்றவர்களுக்கும் உள்ளது. இது தனி நபர் சம்மந்தப்பட்ட அல்லது சமூகம் சம்மந்தப்பட்ட தனி உரிமைகள்.கிரிமினல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது.இதை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
சட்ட ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் 'No Need Common Civil Code' என எதிர்ப்பை பதிவிடுங்கள். மற்ற மக்களையும் பதிவிட கூறுங்கள்.
வெள்ளிக்கிழமை ஜும்மாவின் போது இதை ஜமாத்துகள் முன் எடுக்க வேண்டும் என மஜக சார்பில் கேட்டுக்கொண்டுள்ளோம். இது போன்ற தருணங்களில் நம்மை சுற்றி வாழும் அனைத்து மக்களையும் அரவணைத்து, புரிய வைத்து அவர்களுடன் இணைந்து எதிர்வினையாற்ற வேண்டும்.
சமூகநல்லிணக்கம் மற்றும் பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதன் மூலமே ஃபாசிசவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும்."












Click it and Unblock the Notifications