மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை.. மோடி அரசு பலவீனமாக இருப்பதே காரணம்.. விளாசிய முதல்வர் ஸ்டாலின்!
ராமநாதபுரம்: 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படையினர் தாக்குவது தொடர்கதையாகியுள்ளது. மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் இலங்கை அத்துமீறல் தொடர்கிறது என ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் மீனவர் சங்க மாநாட்டில் கொந்தளித்துப் பேசியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். வழிநெடுகிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். நேற்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறையில் பங்கேற்று கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இதைத்தொடர்ந்து மண்டபத்தில் இன்று நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மீனவர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் அன்பான அழைப்பை ஏற்று நான் இங்கு வந்திருக்கிறேன். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் மீனவர் சங்கங்களை இணைத்து கொள்ள மாட்டார்கள். அதேபோல் மீனவர்கள் மாநாடாக இருந்தால் அதில் அரசு அதிகாரிகள் இடம் பெற மாட்டார்கள்.
ஆனால் இந்த இரு தரப்பினரையும் இணைத்து இந்த மாநாட்டை அமைச்சர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள். மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. மீனவர்களுக்காக திமுக அரசு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார்.
மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. மீன்பிடி தடைக்கால உதவித்தொகையை உயர்த்தி உள்ளோம். காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. கடல் மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் நடைமுறையில் உள்ளது.
நாட்டுப்படகு மீனவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு, டீசல் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டுப்படகு மீனவர்களுக்கு இயந்திரம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. எங்கெங்கு தூண்டில் வளைவுகள் சாத்தியமோ அங்கெல்லாம் தூண்டில் வளைவுகள் அமைக்க பணிகள் தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் அடக்குமுறை அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 83 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது.
தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய பாஜக அரசே பொறுப்பு. மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும், கச்சத்தீவு மீட்கப்படும் என மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு இந்த மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் என்று பிரதமர் மோடி கூறினார். செய்தாரா? மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் கசத்தீவு மீட்கப்பட வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்" என உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications