"உனக்கு 3 நாள் தானா விதி"! வீடு செல்லும் வழியில் ஆட்டோ மீது கார் மோதல்.. பெற்றோருடன் பலியான சிசு
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பச்சிளம் குழந்தையும் அதன் பெற்றோரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்: தலைப்பிரசவத்தை முடித்துக் கொண்டு குழந்தையுடன் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் பச்சிளம் குழந்தை, பெற்றோர் உள்பட 4 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள சிங்கிவலை குப்பத்தைச் சேர்ந்தவர் சின்ன அடைக்கான். இவர் திண்டுக்கல் நத்தம் பகுதியில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி சுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் தலைபிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

3 நாட்கள்
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமதிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மருத்துவர்கள் தாயும் சேயும் நலமாக இருப்பதால் அவர்களை வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து பச்சிளம் குழந்தையை தூக்கிக் கொண்டு தனது கணவர் சின்ன அடைக்கான், உறவினர் காளியம்மாள் ஆகியோருடன் சுமதி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.

ஆட்டோ
ஆட்டோவை வித்தானூரை சேர்ந்த மலைராஜ் என்பவர் ஓட்டி வந்தார். ஆட்டோ மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நதிபாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பி கொண்டிருந்த கார் ஒன்று முன்னால் சென்ற மற்றொரு காரை முந்தியடிக்க சென்றது.

நிலைத்தடுமாறிய கார்
அப்போது நிலைத்தடுமாறிய அந்த கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட சுமதி, ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் அதே இடத்தில் பலியாகிவிட்டனர். பலத்த காயமடைந்த மற்ற 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் குழந்தையும் சின்ன அடைக்கானும் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டனர். காளியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் விக்னேஷ்
சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் விக்னேஷை உச்சிப்புளி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள், தலைபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற தம்பதி தனது குழந்தையோடு சடலமாக வீடு திரும்பியது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் குழந்தையை வரவேற்க வீட்டில் ஆரத்தி தட்டுடன் காத்திருந்த உறவினர்கள் கதறி அழுத காட்சி கோர சம்பவமாக இருந்தது. குழந்தையின் முகத்தை பார்த்தவுடன் நெஞ்சமே வெடிப்பது போல் பீறிட்டு அழுத காட்சி கல்லும் கரையும் அளவுக்கு இருந்தது. 3 நாட்கள் மட்டுமே என அந்த குழந்தைக்கு விதி எழுதப்பட்டிருக்கிறது போலும்!












Click it and Unblock the Notifications