“கை நழுவிய” ஜெயலலிதாவின் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம்.. வெள்ளிக்கவசம் வழங்கி சமாளிக்கும் ஓபிஎஸ்
ராமநாதபுரம்: உட்கட்சிப் பூசல் காரணமாக முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா அளித்த தங்க கவசத்தை அணிவிக்கும் உரிமையை அதிமுக தலைவர்கள் இழந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கவசத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60 வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தேவர் சிலைக்கு தங்க கவசம் ஒன்றை அணிவித்து இருந்தார்.
தேவர் திருமகன் மீது முரட்டு நேசம்! முத்துராமலிங்க தேவருக்கு வைரமுத்து மரியாதை! அப்படியே ஒரு கோரிக்கை

தங்க கவசம்
அந்த தங்க கவசம் பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள வங்கியில் அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் இருவரும் கையெழுத்திட்டு பாதுகாப்புடன் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் ஓபிஎஸ் சார்பிலும் தங்களிடம் தங்க கவசத்தை கொடுக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து மீண்டும் வங்கியில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.

தங்க கவசம் அணிவிப்பு
இதனை தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி வங்கியில் மதுரை வருவாய்த்துறை மற்றும் தேவர் நினைவாலயம் சார்பில் தங்க கவசம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து 27 ஆம் தேதி தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் அறிவிப்பு
இந்த நிலையில் இன்று பசும்பொன் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகவும், தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும் அரும்பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வெள்ளிக் கவசம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவரும்; ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை குறிக்கோள்களாகக் கொண்டு செயல்பட்டவரும்; தமிழகம் உயர, தமிழ்நாடு வளம் பெற, தமிழ்ச் சமுதாயம் மேம்பட உழைத்தவரும், 'வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்' என்று முழங்கியவரும், தன்னலமின்றி நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும் அரும்பாடுபட்டவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

வெள்ளிக்கவம்
அவரது 115-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜை நாளான இன்று (30-10-2022) மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவாக, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளிக் கவசம் அணிவிக்கும் பொருட்டு, 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடக் காப்பாளர் திருமதி ந. காந்தி மீனாள் அம்மையார் அவர்களிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கி மரியாதை செலுத்துவார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.