‛ஒரேபோடு’.. எம்ஜிஆர் பிறந்தநாளில் அன்வர் ராஜா படத்துடன் பரபர போஸ்டர்.. வாசகங்களை கொஞ்சம் பாருங்க!
ராமநாதபுரம்: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,‛‛ தலைவா! நம் கட்சி தலைவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றனர்! நாங்கள்.. கட்சியை காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம். காப்பாற்றுங்கள்!'' என எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு எதிரான வாசகங்களோடு அன்வர் ராஜா படத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதை வென்றவர் எம்ஜிஆர் அரசியலிலும் கால்பதித்தார். அண்ணாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த எம்ஜிஆர் திமுகவின் பொருளாளராக உயர்ந்தார். அண்ணா மறைவுக்கு பிறகு கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் முரண்பாடுகள் ஏற்பட்டது.
இதையடுத்து திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 1972ல் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். 1977ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் அமைச்சரானார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு..சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
அதிமுக கொண்டாட்டம்
இந்நிலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக கட்சியினர், எம்ஜிஆர் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். எம்ஜிஆர் படங்கள், பேனர்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதிமுக சார்பில் ஆண்டுதோறும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம்
அதன்படி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கொடியேற்றி வைத்தார். இந்நிலையில் தான் சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓ பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரத்தில் போஸ்டர்கள்
மேலும் எம்ஜிஆர் நினைவை போற்றும் வகையிலும், அவரது புகழை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் ராமநாதபுரத்தில் வித்தியாசமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜா போட்டவுடன் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் இருக்கும் வாசகங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
போஸ்டரில் இருப்பது என்ன?
அந்த போஸ்டரில், ‛‛தலைவா! நம் கட்சி தலைவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றனர்! நாங்கள்.. கட்சியை காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம். காப்பாற்றுங்கள்!'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு எதிரான வாசங்கங்கள் என கருதப்படுகிறது.
விவாதம் ஏன்?
அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மாறி மாறி நீதிமன்றங்களை நாடியுள்ளனர். தற்போது அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ பன்னீர் செல்வம் தரப்பிலான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தில் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.