"அரசு ஜீப்பா இருந்தா என்ன!" டிராபிக் ஜாம் ஏற்படுத்திய ஜீப்பிற்கு பூட்டு! போலீசுக்கு மக்கள் பாராட்டு
ராமநாதபுரம்: போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அரசு வாகனத்திற்குப் போக்குவரத்து போலீசார் பூட்டுப் போட்டுச் சென்ற படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலத்தில் மழை நீர் முறையாக வடியாமல் சாலைகளில் தேங்கி நிற்பது வழக்கமான ஒன்றாக மாறிப் போயுள்ளது.
இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில் மாநிலத்தில் வடிகால் அமைப்புகள் முறையாக இல்லாத பகுதிகளில் புதிய வடிகால் அமைப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்
அதன்படி ராமநாதபுரம் நகரில் மழைநீர் செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலை பகுதிகள் மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் காரணமாகச் சிறிய தெருக்களில் அதிக வாகனங்கள் சென்றுவருவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளில் போக்குவரத்து போலீசார் காலை முதல் இரவு வரை இடைவிடாத பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அரசு ஜீப்
ராமநாதபுரம் சாலைத்தெருவில் வணிக வளாகம் ஒன்றில் குடிநீர் வாரிய காவிரி குடிநீர் திட்ட அலுவலகம் உள்ளது. இந்த குடிநீர் திட்ட அலுவலகத்தின் ஜீப்பை நிறுத்தி வைக்க, அங்கு உரிய வாகன நிறுத்துமிட வசதி இல்லை. இதனால் அந்த ஜீப் சாலை ஓரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசுக்குச் சொந்தமான ஜீப் என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், இதனால் அங்குப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டே வந்தது.

போக்குவரத்து நெரிசல்
இது குறித்து போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட டிரைவர் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களிடம் வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்துமாறு வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் வலியுறுத்திய போதிலும், அதற்கு எந்த பயனும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தற்போது போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அரசு ஜீப் அதேபோல சாலையில் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பூட்டு
இதனால் கோபமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம், அப்பகுதிக்கு விரைந்து சென்று போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட குடிநீர் வாரிய ஜீப்பிற்கு பூட்டுப் போட்டனர். இதனிடையே இன்று மாலை வழக்கம் போல வாகனத்தை எடுக்க வந்த டிரைவரும், உதவிப் பொறியாளர் அதிகாரியும் வாகனத்திற்குப் பூட்டுப் போட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி
இனி இதுபோல சாலையில் ஜீப்பை நிறுத்த மாட்டோம் என்று போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்த பின்னரே ஜீப்பை எடுக்க அனுமதிக்கப்பட்டனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனம் அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் முறையாகச் செயல்பட்ட போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கைக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications