6 மீனவர்கள் கைதுக்கு கண்டனம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்!
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரையும், ஒரு விசைப் படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை அடித்து நொறுக்குவதும், வலைகளை அறுப்பதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை அளித்த போதிலும், இதுபோன்ற விரும்ப தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும், அதிலிருந்து ஆறு ராமேஸ்வரம் மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரையும் முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் இன்னும் இந்தியா திரும்பாத நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறைவாசிகள் விடுதலை என்னாச்சு.. முதல்வர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இருக்காங்களா? -நெல்லை முபாரக்
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஆறு மீனவர்களையும் ஒரு விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2018 ஆண்டிலிருந்து தற்போது வரை, இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாளை ஒரு நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், டோக்கன் வழங்கும் அலுவலகத்துக்கு முன்பாக மீனவர்கள் தரையில் அமர்ந்து கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.