தொடக்கப்பள்ளி சிறுமிகளிடம் பாலியல் தொல்லை... போக்சோவில் கைதான கமுதி ஆசிரியர்
கமுதி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை அபிராமம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம்: கமுதி அருகே கொட்டகுடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆதி முத்தமிழ்செல்வன்.
4 மாநிலங்களில் வெற்றி-ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கே சாதகம்:எதிர்க்கட்சிகளின் வியூகம் அவுட்- எப்படி?
பள்ளி குழந்தைகளிடம் பாலியல் தொல்லை:
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் பெற்றோரிடம் ஆசிரியர் ஆதி முத்தமிழ்செல்வன் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகாரளித்து உள்ளனர். இது தொடர்பாக மற்ற சிறுமிகளிடம் விசாரித்ததில் அவர்களுக்கும் தொடர்ச்சியாக ஆசிரியர் ஆதி முத்தமிழ்ச்செல்வன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
பெற்றோர் அளித்த புகார்:
இது குறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடமும் பள்ளிக் கல்வித்துறையிடமும் புகார் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் நல அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடமும் சக ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஆதி முத்தமிழ்செல்வனை அபிராமம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது:
தொடர் விசாரணையின் முடிவில் மாணவிகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆதிமுத்தமிழ்செல்வன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதியானது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அபிராமம் போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.
பள்ளிகளில் தொடரும் பாலியல் தொல்லை:
கடந்த ஆண்டு சென்னை பத்மா சேஷாத்ரி என்ற தனியார் பள்ளி மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் தகாத முறையில் நடந்து கொண்டதும், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இண்டெர்னேஷனல் பள்ளி மாணவிகளுக்கு அதன் நிறுவனர் சாமியார் சிவசங்கர் பாபா தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கோவையிலும் தனியார் பள்ளி மாணவி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் விவாத பொருளானது.
4 மாதங்களுக்கு முன் ராமநாதபுரத்தில் ஒரு சம்பவம்:
இதே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியிலும் கடந்த டிசம்பர் மாதம் அரசுப் பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் 13 மாணவிகள் ஆசிரியர் ராமராஜன் மீது அளித்த பாலியல் புகாரில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கல்வி கற்று குடும்பத்தையும், சமூகத்தையும் பெண் பிள்ளைகள் முன்னேற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பும் பெற்றோர், இதுபோன்ற சில ஆசிரியர்களின் செயல்பாடுகளில் அச்சம் அடைந்துள்ளதுடன் பெண் குழந்தைகளை கல்வி கற்க அனுப்பவே தயங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.