8 வயது சிறுவனின் அபார ஆற்றல்... ஆட்டோமொபைல் துறையை அலசி ஆராயும் திறமை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் தனது அபார நினைவாற்றலால் ஆட்டோமொபைல் துறையை பற்றி அலசி ஆராய்ந்து அது தொடர்பான முழு விவரங்களையும் அறிந்து வைத்துள்ளான்.
தண்டாயுதபாணி -கார்த்திகா தம்பதியின் மகன் சந்தோஷ்கண்ணா பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனின் தந்தை தண்டாயுதபாணி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 8 வயதாகும் சிறுவன் சந்தோஷ்கண்ணாவுக்கு ஆட்டோமொபைல் துறை மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது. இந்த ஆர்வத்தின் காரணமாக கார்களை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துள்ளார்.

மாருதி காரில் தொடங்கி பி.எம்.டபிள்யூ, பென்ஸ், வால்வோ உள்ளிட்ட கார்கள் வரை அதன் சிறப்பம்சங்கள், நிறுவனத்தின் சிறப்புகள் உள்ளிட்டவற்றை பட்டியலிடுகிறான். மேலும், காரின் படத்தை பார்த்தே அந்த கார் எந்த வகை மாடலை சேர்ந்தது, அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என கார் ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்களை போல் முழு தகவல்களை தருகிறான்.

மேலும், சிறுவன் சந்தோஷ் கண்ணாவுக்கு அபார நினைவாற்றல் உள்ளதால் அண்மைக்காலமாக வெளியாகிய கொரோனா பாதிப்பு விவரங்களை மாவட்ட வாரியாகவும் கூறுகிறான். சிறுவனின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் அவனுக்கு தேவையான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஆசிரியர்களும், பெற்றோரும் அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications