சேலத்தை குறித்து கொடுத்த ஆர்எஸ்எஸ்.. எடப்பாடியின் அடிமடியில் கைவைத்த பாஜக.. கொதிக்கும் அதிமுக!
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியை கேட்டு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் கூடுதல் தொகுதியை கேட்டு பாஜக நெருக்குவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழக பாஜகவினர் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே தமிழக பாஜக தரப்பில் பூத் கமிட்டி மாநாடு, நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே பீகார் தேர்தலை போல் தமிழக தேர்தலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரு ப்ளூபிரிண்ட் போட்டு கொடுத்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ப்ளூபிரிண்டை பாஜகவினர் நூல் பிடித்ததை போல் செயல்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக உடனான கூட்டணி பாஜகவுக்கு வலு சேர்த்துள்ளது. இதனிடையே ஆர்எஸ்எஸ் தரப்பில் அதிமுகவின் பலத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பாஜக கூடுதலாக வேரூன்ற தீவிரமாக இருக்கிறது.
அதன்படி பாஜக கவனம் செலுத்தும் சில தொகுதிகள் அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாக கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் பாஜக கவனம் செலுத்தும். ஆனால் இம்முறை கோவை, திருப்பூர் மட்டுமல்லாமல் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 2 தேர்தல்களில் சேலம் வடக்கு தொகுதியை தவிர்த்து 9 தொகுதிகளில் அதிமுக கொடி நாட்டியது. அதேபோல் கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதி அமைச்சர் முத்துசாமி மட்டுமே திமுக தரப்பில் வெற்றி பெற்றார்.
இதனால் இம்முறை அதிமுக பலமாக இருக்கும் இரு மாவட்டங்களில் போட்டியிட பாஜக காய் நகர்த்தி வருகிறது. ஆர்எஸ்எஸ் தரப்பில் போட்டு கொடுத்துள்ள திட்டம் என்பதால், எடப்பாடி பழனிசாமியுடன் பேசப்பட்டுள்ளது. சொந்த மாவட்டத்திலேயே பாஜகவுக்கு தொகுதியை ஒதுக்கினால் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எடப்பாடி பழனிசாமிக்கும் எழுந்துள்ளது.
ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜகவின் இந்த அணுகுமுறைக்கு பின்னணியில் பாமகவின் கைகளும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏனென்றால் சேலம் மாவட்டத்தில் வன்னியர்களும் அதிகளவில் இருக்கின்றனர். பாமகவின் ஆதரவு இல்லாமல் சேலம் மாவட்டத்தில் முழுமையாக வெற்றி பெறுவது கடினம். இதனை அறிந்தே எடப்பாடி பழனிசாமி பாமகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அதேபோல் பாமகவின் கூட்டணி காரணமாகவும் 2021 சட்டசபைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தின் அதிமுக ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அன்புமணி பாஜகவுடன் அதிக நெருக்கம் காட்டுவதால், இதனை வைத்து எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
சேலத்தில் போட்டியிட்டால் எடப்பாடியே வெல்ல வைத்துவிடுவார் என்பதால், அங்கு போட்டியிட பாஜகவினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பாஜகவின் மாநில பொறுப்பில் இருந்து கோபிநாத் இப்போதே தொகுதியை கேட்டு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாஅ அதிமுகவுக்கு பாஜக செக் வைத்து வருவதால், அதிமுக தொண்டர்களும் அதிர்ச்சி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications