திமுகவுடன் பாமக கூட்டணி பேரமா? அதெல்லாம் வதந்தி.. அன்புமணி திட்டவட்டம்.. விசிக நிம்மதி பெருமூச்சு?
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை- அன்புமணி
சேலம்: தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் தகவல்கள் உண்மை அல்ல, அவை வதந்தி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பாமக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். பின்னர் இடையே மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்ற பேச்சு பரவலாக உள்ளது.
அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக, ஒப்பந்தத்தின் படி ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பெற்றுக் கொண்டது. அந்த பதவி அன்புமணி ராமதாஸுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 பாமக எம்எல்ஏக்கள் வென்று சட்டசபைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலின்போது நகராட்சி பிரிவுக்கு நடத்தப்பட்ட போது பாமக தனித்து போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சி அமையும் என அவ்வப்போது பாமக கூறி வருகிறது.

கூட்டணி
இனி நம் தலைமையின் கீழ் வருவோருடனே கூட்டணி என பாமக தெரிவித்துவிட்டது. இதையேதான் ராமதாஸும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். மேலும் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டுதோறும் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தாக்கல் செய்யும். அதில் மக்களுக்கான பல நலத்திட்டங்கள் இருக்கும்.

பாமக
எனவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என பாமக கேட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவும் அளிக்கவில்லை. மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்ற பேச்சுவார்த்தை பரவலாக சுற்றி வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகள்
ஆனால் பாமக இருக்கும் இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்காது என தொல் திருமாவளவன் இன்று கூட கூறியுள்ளார். எப்போதும் அவர் அதைத்தான் கூறி வருகிறார். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக அந்த கூட்டணியிலிருந்து விலகும் நிலை உள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார், பாமகவா, விசிகவா, ராமதாஸா திருமாவளவனா என அவர் தேர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் பொதுமக்கள் மனதில் இருந்தன.

சேலத்தில் பாமக தலைவர்
இந்த நிலையில் சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஈரோடு கிழக்கு தொகுதியை அனைத்து அமைச்சர்களும் ஒரு மாதத்திற்கு குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள். இதனால் தமிழக அரசு பணிகள் ஸ்தம்பித்தன. அங்கு நடந்த விஷயங்களை பார்த்தால் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி?
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். அதற்கான பணிகள் நாடாளுமன்றத் தேர்தலின் போது தொடங்கப்படும். திமுகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். லாபத்தில் இயங்கி வரும் எரிவாயு சிலிண்டர் நிறுவனங்கள் கேஸ் விலையை உயர்த்துவது தவறு. எனவே இன்று உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையை அவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த வாரத்தில் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். திமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தால் அந்த இடத்தில் விசிக இருக்காது என திருமாவளவன் கூறி வந்த நிலையில் தற்போது அன்புமணியே கூட்டணி இல்லை என கூறிவிட்டதால் சிறுத்தைகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.












Click it and Unblock the Notifications