சட்டுபுட்டுனு ஒரு நல்ல முடிவை எடுங்க! திமுக எம்பிக்கு பாஜக மறைமுக தூண்டில்! பரபரக்கும் மாங்கனி நகரம்
சேலம்: சேலம் திமுக எம்பி எஸ்.ஆர் பார்த்திபனை தங்கள் கட்சிக்கு வருமாறு பாஜக மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது.
அரசியல் கட்சிகளில் யாரேனும் அதிருப்தியில் இருந்தால் அவர்களுக்கு தூண்டில் போட்டு வலையில் சிக்குகிறார்களா என மாற்றுக் கட்சியினர் காத்திருக்கிறார்கள்.
அதிலும் ஒரு மாவட்டத்தின் முக்கிய புள்ளி, தொகுதி எம்எல்ஏ, எம்பி என்றால் கேட்கவே வேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப விடாமல் விரட்டி பிடித்துவிடுகிறார்கள்.

அதிமுக தலைமை
அதிமுகவில் தலைமைகளுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அதிமுகவின் ஆறுகுட்டி, பாஜகவின் மைதிலி வினோ உள்ளிட்டோர் இணைந்தனர்.

மாற்றுக் கட்சி
ஆளும் கட்சியான திமுக, பாஜகவுக்கு மாற்றுக் கட்சியினர் தாவி வருகிறார்கள். இந்த இரு கட்சிகளிலும் பதவியில் இருப்பவர்கள் பெரும்பாலும் மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல மாட்டார்கள். அந்த வகையில் சேலம் திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபனை பாஜக நிர்வாகி ஒருவர் தங்கள் கட்சிக்கு வருமாறு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜக நிர்வாகி
பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டுபுட்டுனு ஒரு நல்ல முடிவை எடுங்க பார்த்திபன். விரைவில் தேசப்பணி சிறக்க வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி எம்பியை பாஜக நிர்வாகி அழைக்கிறாரே என்னவாக இருக்கும் என விசாரித்தோம்.

புறக்கணிப்பு புகார்
அப்போதுதான் ஒரு விஷயம் நமக்கு புலப்பட்டது. அதாவது சேலம் மாநகராட்சியில் நடைபெறும் விழாக்களில் தாம் புறக்கணிக்கப்படுவதாக திமுக எம்பி பார்த்திபன் தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்டவிரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் என்னை புறக்கணிக்கிறார். சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்க்கட்சி எம்பி என நினைக்கிறார் போலும் என கூறியிருந்தார்.

ட்வீட்டை நீக்கிய எம்பி
இந்த நிலையில் அந்த ட்வீட்டை உடனே எஸ்.ஆர். பார்த்திபன் நீக்கிவிட்டார். பிறகு இன்னொரு ட்வீட்டில் சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதை வரவேற்கிறேன், நன்றி மாநகராட்சி கமிஷனர் சிறப்பாக செயல்பட கூடியவர். முதல்வர் வழியில் சிறப்பாக பணியாற்றுவோம் என பார்த்திபன் தெரிவித்திருந்தார். அப்போதுதான் புரிந்தது முதல்வர் பார்த்திபனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதனால்தான் பழைய ட்வீட்டிற்கு பதில் புதிய ட்வீட்டை கொடுத்துள்ளார் என தெரியவந்தது.

அதிருப்தியா
இந்த ட்வீட்டை பார்த்த ஊடகங்கள் திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபன் திமுக மீது அதிருப்தியில் இருக்கிறார் என தவறாக நினைத்துக் கொண்டு அவர் தேசியக் கட்சியில் இணைகிறார் என செய்தி வெளியிட்டிருந்தார். அதை பார்த்த நிர்மல் குமார், சட்டுபுட்டுனு ஒரு முடிவை எடுங்க என ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications