முதல்வரின் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது… குஷியில் தேமுதிக
சேலம்: அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், முதலமைச்சரின் வெளிப்படையான பேச்சு தேமுதிகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ள நிலையில், தேமுதிகவை இழுக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. அதேநேரம், திமுகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுக அமைச்சர்கள் தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தெரிகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
இந்த நிலையில், சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது: தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு நடந்து வருகிறது. இது போன்ற கட்சிகள் கூட்டணி வருவதை வரவேற்கிறேன் என்றார்.
மகிழ்ச்சியில் தேமுதிக
முதலமைச்சரின் இந்த வெளிப்படையான பேச்சு தேமுதிகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கூட்டணியில் பேச்சுவார்த்தையில் இழுபறியில் உள்ள நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து பேச விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் சுதீஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் சந்திப்பு
முன்னதாக, விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல், விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்பட்டதால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
சூடு பிடித்தது
பாஜக தரப்பில் இருந்தும் அதிமுக தரப்பில் இருந்தும் வெளிப்படையாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அறிவித்துள்ள நிலையில், இருதரப்பிலும் கூட்டணி பேச்சு மீண்டும் சூடுபிடித்துள்ளது.