'தொங்கு சதை', பல்கலை.வேந்தராக முதல்வர்.. ஆளுநர் பதவிக்கு எதிராக உரத்து பேசிய திமுக இளைஞரணி மாநாடு!
சேலம்: "தொங்கு சதை"யான ஆளுநர் பதவி என்பதையே நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்; மாநிலங்களில் பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என ஆளுநர் பதவியை இலக்கு வைத்து திமுக இளைஞர் அணி மாநாடு தீர்மானங்கள் நிறைவேற்றியது.
சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் மாநில சுயாட்சி முழக்கங்களை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆளுநர் பதவிக்கு எதிராகவும் திமுக இளைஞரணி மாநாடு குரல் கொடுத்துள்ளது.

பல்கலை வேந்தராக முதல்வர்: திமுக இளைஞரணி மாநாட்டு தீர்மானங்களில் ஒன்றாக, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியிலும் ஆராய்ச்சிக் கல்வியிலும் தனித்துவத்துடன் திகழ்ந்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு ஒன்றிய பா.ஜ.க. அரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்களின் தன்னிச்சையான போக்கினால் பெரும் பாதிப்புக்குள்ளாவதுடன், ஊழல் புகார்களும் காவிமயமாக்கும் தன்மையும் அதிகரித்து வருகின்றன. கல்வியில் மதவாதம்-வெறுப்புணர்வு, நிர்வாகத்தில் ஜனநாயக விரோதம்-ஊழல் ஆகியவைத் தொடர்ந்து கொண்டிருப்பதால், தமிழ்நாட்டின் செம்மையான உயர்கல்வி-ஆராய்ச்சிக் கல்வி நீடித்திட, பல்கலைக்கழக வேந்தர் எனும் உயர் பொறுப்புக்கு, நியமனப் பதவியில் உள்ள ஆளுநருக்குப் பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சரே தகுதியானவர் என்பதால், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் அவர்கள் செயல்படுவார் என்கிற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிப்பதுடன், அதனை விரைந்து நிறைவேற்றிட, இந்த மாநாடு வலியுறுத்துகிறது என்பது நிறைவேற்றபப்ட்டது.
ஆளுநர் பதவியை ரத்து செய்க: மேலும் மக்களாட்சியின் மாண்பு என்பது ஜனநாயகப் பூர்வமான தேர்தல் களத்தில் வாக்காளர்களாகிய மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றத்தின் சுயாட்சிமிக்கச் செயல்பாடுகளேயாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநில அரசுகளை, நியமனப் பதவியான ஆளுநர் பதவியைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்துவதற்குத் திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கினைக் கண்டிப்பதுடன், ஆளுநர் பதவி என்ற தொங்கு சதை’யை நிரந்தரமாக அகற்றுவதே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என இம்மாநாடு தீர்மானிக்கிறது என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications