"நான் நம்பிக்கையுடன் உள்ளேன்" மகன் மிதுன், மனைவி ராதாவுடன் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சேலம்: எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் மகன் மிதுன் மற்றும் மனைவி ராதா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கிறார். 8வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி, காலையிலேயே குடும்பத்தினருடன் வந்து வாக்களித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சட்டசபைத் தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோடை வெப்பம் காரணமாக காலையிலேயே வாக்குச்சாவடிகளில் அதிகளவில் கூட்டம் நிரம்பி வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் நபராக வாக்கினை செலுத்தினார். கோடை வெப்பத்திலும் ஸ்டைலாக வெள்ளை நிற கோட் சூட் அணிந்திருந்தார்.
அதேபோல் நாதக சீமான், அமைச்சர் கே.என்.நேரு, ரகுபதி, கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலையிலேயே குடும்பத்தினருடன் வாக்கினை செலுத்தி இருக்கிறார். மனைவி ராதா, மகன் மிதுன் பழனிசாமி ஆகியோருடன் நடந்து வந்து வாக்கினை செலுத்தினார்.
எடப்பாடி தொகுதியில் 8வது முறையாக போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி, சொந்த தொகுதியிலேயே வாக்களித்துள்ளார். சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எடப்பாடி பழனிசாமி வாக்களித்திருக்கிறார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி வந்து ஜனநாயக கடமையை செய்ய வேண்டும்.
எதனை மனவில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார் என்று அதிமுகவினரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications