பாஜக வெளியேறவில்லை- தேசிய அரசியலில் பாஜகவுடன் இணைந்து செயல்படுவோம்: எடப்பாடி பழனிசாமி
சேலம்: பாஜகவுடன் தேசிய அரசியலில் இணைந்தே செயல்படுவோம் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள்; 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள்; 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டுகள் என மொத்தம் 12,838 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும். திமுக அணியில் கூட்டணி கட்சிகளுடன் மாவட்ட அளவிலான இடஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இடங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் தமாகா, பாஜக பேச்சுவார்த்தை நடத்தின. அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
அதேபோல் பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவையும் தனித்தனியே தேர்தலை எதிர்கொள்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்ததை அதிமுக தொண்டர்கள் பல இடங்களில் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அளித்த பேட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகள் 490 பேரூராட்சிகள் 138 நகராட்சிகள் என மொத்தம் 12, 838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்று முக்கிய பதவிகளை கைப்பற்றுவோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என விருப்பப்படுவது வழக்கம்தான். எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தலில் குறைந்த அளவிற்கே வாய்ப்பு வழங்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்கக் கூடிய சூழலில் கட்சியினர் அதிக அளவில் போட்டியிட வேண்டும் என ஒவ்வொரு கட்சியினரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்குமே இந்த சிரமம் உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் பாஜகவுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உடன்பாடு ஏற்படவில்லை.

பாஜகவுடன் இணைந்தே செயல்படுவோம்
எதிர்காலத்தில் தேர்தல் வரும்போது அப்போதைய நிலைப்பாடு தெரிவிக்கப்படும். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது என்று கூறுவது தவறு. அந்த கட்சியினருக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். தேசிய அரசியலைப் பொருத்தவரை நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் இணைந்து செயல்படுவோம். அப்போதுதான் தமிழகம் வளர்ச்சி பெறும். மக்களுக்கு நன்மை செய்ய முடியும் எங்கள் குழந்தை எங்களுக்கு முக்கியம். அவரவர் குழந்தை அவரவர்க்கு முக்கியம். கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு கட்சியினர்தான் குழந்தை போன்றவர்கள். அவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்தில் மக்கள்
ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. அதிமுக ஆட்சியில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது கணக்கு குறைத்து காண்பிக்கப்படுகிறது எண்ணிக்கையை குறைத்துக் காண்பிக்கிறார்கள். கொத்து கொத்தாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பொய் வழக்கு
திமுக ஆட்சியில் நடைபெறும் கொலை, கொள்ளை குறித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சர்வாதிகார முறையில் திமுக ஆட்சி நடைபெறுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொங்கல் தொகுப்பு தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை. 21 பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் 16 பொருட்கள் வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதை யாராலும் மறைக்க முடியாது. பொங்கலை உற்சாகமாக கொண்டாட நினைத்த பொது மக்களை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. மக்களின் வயிற்றில் அடித்து விட்டது. பொங்கல் தொகுப்பு வழங்கத் தொடங்கிய உடனே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். அப்போதே விசாரணை நடத்தி இருந்தால் வெறும் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் உண்மை வெளிவந்து இருக்கும். ஆனால் நான் அறிக்கை வெளியிட்டு 17 நாட்கள் கடந்த பின்னர் சம்பிரதாயத்திற்காக விசாரணை நடத்துவோம் என்று அறிவித்துள்ளார் முதல்வர். இதன் மூலம் எந்த உண்மையும் வெளிவராது.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications