மூச்சிரைக்க போலீசுக்கு வந்த ஜோடி.. பவித்ரா கடத்தப்பட்டாரா.. மாரியப்பன் தம்பியின் காதல் "சுபம்"
மாரியப்பன் தம்பி திருமணத்தில் சேலம் போலீசார் சமரசம் செய்துள்ளனர்
சேலம்: கடுமையான எதிர்ப்பையும் மீறி காதலியை கரம்பிடித்தார் தங்க மாரியப்பனின் தம்பி.. இதனால் சேலம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பெரியவடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற இவர் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.
ராஜஸ்தான் தொழிற்சாலையில் மோசமான தீவிபத்து.. 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
இவரது தம்பி கோபி.. 24 வயதாகிறது.. இவர் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்தார்... இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்... எனவே, கடந்த 24-ந்தேதி இந்த காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம் பிடித்தது.
அண்ணாமலை
இந்நிலையில்தான், பவித்ராவின் அப்பா அண்ணாமலை, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் கூறியிருந்தார். அதில், "நான் வவிசாய கூலி வேலை செய்து வருகிறேன்.. எனக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.. மூத்த மகள் பவித்ராவுக்கு 20 வயதாகிறது.. சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 27-ம் தேதி காலையில் இருந்து பவித்ராவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மாரியப்பன்
எங்கள் ஊரைச் சேர்ந்த மாரியப்பனின் தம்பி கோபி, அவரை கடத்தி சென்று விட்டார். பெங்களூருவில் உள்ள மாரியப்பன் வீட்டில் பவித்ராவை அடைத்து வைத்துள்ளனர். மாரியப்பனின் மனைவி ரோஜாவின் பாதுகாப்பில் என்னுடைய மகளை வைத்துள்ளனர். இதற்கு ஜெகநாதன், ராகுல்காந்தி, கிரிநாத், வசந்த் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்... அவர்களிடமிருந்து மகளை மீட்டு கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்... இந்த புகாரின் பேரில் விசாரணையும் ஆரம்பமானது..
தஞ்சம்
ஆனால், இதனிடையே, கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பவித்ராவுடன் கோபி, சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.. தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊரைவிட்டு வெளியேறி கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும் பவித்ரா ஸ்டேஷனில் சொன்னார்.. அத்துடன், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காதல் ஜோடி போலீசாரிடம் கேட்டுக் கொண்டது..
சமாதானம்
இதை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மகளிர் போலீசாரும் இரு வீட்டாரையும் அழைத்து சமரச் பேச்சுவார்த்தை நடத்தினர்.. பவித்ரா கோபியுடன் செல்வதாக சொன்னார்.. அதன்படியே இரு வீட்டினரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.. தங்கம் வென்ற மாரியப்பன் சகோதரர் மீது புகார் வந்ததால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது..