வாழப்பாடியே வாயை பிளந்தது.. மல்லிகைப்பூ, பளபள பட்டுத்துணிகளுடன் காதல் ஜோடி.. மாப்பிள்ளைதான் ஹைலைட்டே
வாழப்பாடியில் பிரான்ஸ் நபரை காதலித்து கரம் பிடித்தார் இளம்பெண்
சேலம்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞரை உருகி உருகி காதலித்து, தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார் சேலத்து இளம்பெண்.. இவர்களின் இந்த காதல் திருமணத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது,.
சேலம் மாவட்டம் வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி.. ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சியாளர்.
இவரது மனைவி பெயர் சுகந்தி.. இவரது மகள் பெயர் கிருத்திகா.. இவர் ஒரு என்ஜினியர்.. சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

காதல் ஜோடி
வேலை பார்த்து வந்த இடத்தில், அசானே ஒச்சோயிட் என்பவர் அறிமுகமானார்.. இந்த அறிமுகம் காதலானது.. அசானே, பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்.. பாரிஸ் நகரத்தில் வசித்து வருகிறார்.. இவரும் ஒரு என்ஜினியர்தான்... காதலர்கள் இருவருமே தங்கள் காதலை வீடுகளில் சொல்லவும், இரு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதம் தந்தார்கள்.. அதேசமயம், திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திடவும் மாப்பிள்ளை வீட்டில் சம்மதம் தெரிவித்தனர்.

வாழப்பாடி
இதையடுத்து, வாழப்பாடியில், கல்யாண வேலைகள் தடபுடலாக ஆரம்பமானது.. பிரான்ஸ் நாட்டிலிருந்து மாப்பிள்ளையின் சொந்தக்காரர்கள் ஒரு வாரத்திற்கு முன்னாடியே இங்கு வந்துவிட்டனர்.. பெண் அழைப்பு நிகழ்ச்சி முதல் ஒவ்வொன்றிலும் கலந்து கொண்டனர்.. சேலம் 5 ரோடு பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் இந்த திருமணம் நடந்தது..

வேட்டி சட்டை
தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக திருமணம் சிறப்பாக நடந்தேறியது.. மாப்பிள்ளை ஆசானே, கிருத்திகாவுக்கு தாலி கட்டினார்.. ஒட்டுமொத்த வாழப்பாடியும் இந்த திருமணத்துக்கு சென்று, மணமக்களை வாழ்த்தியது.. மாப்பிள்ளை, வேட்டி- சட்டையும், மணப்பெண் பட்டுசேலை, தங்க ஆபரணங்கள், ஜிமிக்கி கம்மல் வளையலும் அணிந்திருந்தனர்.. நம்முடைய சாப்பாடுதான் உணவில் பரிமாறப்பட்டது. இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம், அல்வா இதையெல்லாம் பிரான்ஸ் நாட்டினர் ஆசை ஆசையாக சாப்பிட்டனர்..

இட்லி தோசை
தமிழர்களின் உணர்ச்சிபூர்வமான மண விழா எங்களை நெகிழ வைத்தது என்றும், முக்கியமாக தமிழர்களின் விருந்து உபசரிப்பும், உணவுகளும் மிகவும் சுவையாக இருந்தது என்றும் நெகிழ்ந்து சொன்னார்கள்.. அயல்நாட்டில் மலர்ந்த காதல், வாழப்பாடியில் திருமண பந்தத்தில் முடிந்துள்ளதையடுத்து, மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன... அத்துடன் வெளிநாட்டு இளைஞர், நம்ம ஊர் மருமகன் ஆகிவிட்ட நிலையில், வாழப்பாடியே பூரித்து போயுள்ளது..












Click it and Unblock the Notifications