ஜிஎஸ்டி பணத்தில் சொந்த செலவு...கண்டுபிடித்தும் கண்டுக்கல..இப்போ கம்பி எண்ணும் வணிகர்
சேலம் : ரூ.7.75 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி வசூல் பணத்தை தனது சொந்த செலவினங்களுக்காக பயன்படுத்தியதுடன், ஜிஎஸ்டி துறை தொடர்ந்து அறிவுறுத்தியும் அதனை கண்டுகொள்ளாத நபர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகளின் பேரில் சேலம் மத்திய சரக்கு - சேவை வரி ஆணையகத்திற்குட்பட்ட பதிவு பெற்ற வரி செலுத்தும் வணிகர் ஒருவர் 7.75 கோடி ஜிஎஸ்டி வரி வசூலித்து அதனை அரசு கணக்கில் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஜிஎஸ்டி துறையின் தொடர்ச்சியான நினைவூட்டல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டும் அந்த வரி ஏய்ப்பாளர் தான் வசூல் செய்த ஜிஎஸ்டி தொகையினை அரசுக்கணக்கில் செலுத்தவில்லை. மாறாக அவர் தனது வேறு வகை செவலினங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட வரி ஏய்ப்பாளர் சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி தொகையை 3 மாதங்களுக்கு மேலாக வரி செலுத்துபவர் தன்வசம் வைத்து கொள்ளுதல் கூடாது. இவ்வகை விதிமீறல்கள் மத்திய சரக்கு - சேவை வரி சட்டத்தின்படி தண்டனைக்குரியது. இதன்மூலம் வணிகர்கள், வரி செலுத்துபவர்கள் தாங்கள் வசூலித்த ஜிஎஸ்டி தொகையினை உரிய நேரத்திற்குள் அரசுக்கு செலுத்த வேண்டும். காலமுறை படிவங்களை உரிய நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி சட்டத்திற்கு உரிய கட்டாயமான பொறுப்புகளை தவறாமல் கடைபிடித்து தேச கட்டமைப்புக்கு பங்களித்து தேச வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என சேலம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் மீனலோச்சனி தெரிவித்துள்ளார் .












Click it and Unblock the Notifications