காலை உணவு திட்டத்தில் சமைக்க வந்த ஊழியருக்கு அதிர்ச்சி.. சுவரில் மனிதக்கழிவு: சேலத்தில் ஒரு கொடூரம்!
சேலம்: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள், சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் சமையற்கூட சுவரில் மனிதக் கழிவுகள் பூசப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையல் கூடத்தில் மர்ம நபர்கள் மனித கழிவை பூசி சென்றுள்ளனர். விடுமுறைக்குப் பிறகு நேற்று காலை, காலை உணவுத் திட்டத்திற்கு உணவு சமைப்பதற்காக ஊழியர்கள் வந்தபோது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவலறிந்த மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாச்சலம், கொளத்தூர் வட்டாட்சியர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தூய்மைப் பணியாளர்கள் மூலம் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அப்பகுதியில் பலர் குடித்துவிட்டு மது பாட்டில்களை போடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்திட கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
காலை உணவுத்திட்ட சமையற்கூடத்தின் மீது மனிதக் கழிவு பூசிய நபர் குறித்து அப்பகுதி மக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், காலை உணவுத் திட்டத்திற்கு உணவு தயாரிக்கும் சமையற்கூட சுவரில் மனித கழிவுகளைப் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த சம்பவம் நடந்து 10 மாதங்களைக் கடந்த பிறகும், இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நடந்த இச்சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications