"உடனே மாறுங்க.. நடப்பது திமுக ஆட்சி".. சேலம் வியாபாரி மரணம்.. போலீஸ் மீது கனிமொழி பாய்ச்சல்!
சேலம்: சேலத்தில் போலீசார் தாக்கியதில் முருகேசன் என்ற வியாபாரி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்பி கனிமொழி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் தாக்கியதால் சேலத்தில் முருகேசன் என்ற வியாபாரி இன்று பலியானார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து சரியாக ஒருவருடம் முடிந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இன்னொரு கோர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம்
சேலத்தில் உள்ள எடப்பட்டி பகுதியில் போலீசார் சோதனை செய்த போது வியாபாரி முருகேசன் பைக்கில் வந்துள்ளார். இவர் குடித்துவிட்டு பைக் ஓட்டியதாக கூறப்படுகிறது. போலீசார் இவரை விசாரிக்கும் போது, கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்கு வாதத்தில் போலீசார் இவரை தாக்கி உள்ளனர்.

தாக்குதல்
நடுரோட்டில் போலீசார் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் மயங்கி விழுந்தார். இதையடுத்து நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் இன்று காலை பலியானார். போலீஸ் தாக்கிய வியாபாரி ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனிமொழி
இந்த சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கனிமொழி தனது ட்வீ ட்டில், சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் மாற வேண்டும். நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான் குளம்
கடந்த ஆட்சியில் நடந்த சாத்தான் குளம் சம்பவம் காரணமாக திமுக அரசு போலீஸ் எல்லோரும் கனிவுடன் நடக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே உத்தரவிட்டு இருந்தது. மக்களிடம் வன்முறையை பிரயோகிக்க கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதையும் மீறி போலீஸ் நடத்திய தாக்குதல் காரணமாக தற்போது வியாபாரி முருகேசன் பலியாகி உள்ளார்.

கோபம்
நேற்றுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளத்தில் அவர்களின் புகைப்படத்திற்கு கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுபோன்ற சம்பவம் நடக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது சேலம் சம்பவத்திற்கு கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் முருகேசனை தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உடனடியாக கைது செய்யப்பட்டு, வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications