மனைவியாக நடிக்க ரூ.30 ஆயிரம்.. திருமண மோசடி ராணி ஜோதிமணி கைது.. ஆசைவார்த்தையில் விழுந்த 11 ஆண்கள்.. பின்னணி
சேலம்: தமிழ்நாடு முழுவதும் 11க்கும் மேற்பட்ட ஆண்களை ஆசைவார்த்தை கூறி திருமண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பெண்ணான தீபா என்கிற ஜோதிமணி மற்றும் புரோக்கர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வடகரையாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசண்முகம். இவருக்கு ஏற்கனவே திருமணமாக கருத்து வேறு காரணமாக மனைவியை பிரிந்ததால், 2வது திருமணம் செய்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். இதற்காக திருமல் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் புரோக்கரான தமிழ்ச்செல்வியை நாடி இருக்கிறார்.

புரோக்கர்கள் செய்த செயல்
இவர் மூலமாக மதுரையைச் சேர்ந்த புரோக்கர்களான சங்கர், வேல்முருகன், முத்துலட்சுமி, கஸ்தூரி, பாண்டி ஆகியோர் அறிமுகமாகி இருக்கிறார்கள். இவர்கள் தரப்பில் 2வது திருமணம் செய்து வைக்க புரோக்கர் கமிஷனாக ரூ.4 லட்சம் பேசப்பட்டிருக்கிறது. இதற்கு முதற்கட்டமாக ரூ.1.20 லட்சம் வாங்கி இருக்கின்றனர்.
மதுரையில் திருமணம்
இதன்பின் சிவசண்முகத்திற்கு விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகள் தீபா என்பவரை 2வது திருமணம் செய்து வைத்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன்பின் சிவசண்முகம் மனைவியுடன் சொந்த ஊரான வடகரையாத்தூருக்கு வந்திருக்கிறார்.
ஏமாந்த சிவசண்முகம்
ஒருநாள் அவர் தங்கிய நிலையில், அடுத்த நாளே சிவசண்முகத்தின் மனைவியான தீபா வீட்டில் இருந்த நகை, வெள்ளி குலுசு, பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களுடன் எஸ்கேப் ஆகி இருக்கிறார். இதனை அறியாமல் விடிந்ததும் சிவசண்முகம் தீபாவுக்கு தொடர்பு கொண்ட போது, செல்ஃபோன் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் புரோக்கர்களின் செல்ஃபோனும் ஆஃபில் இருந்திருக்கிறது.
விரக்தியில் தற்கொலை
இதனால் தாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த சிவசண்முகம், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து சிவசண்முகம் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து திருமண மோசடி செய்த பெண் மற்றும் புரோக்கர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
6 பேரும் கைது
இதன்பின் இந்த கும்பலை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து போலீசாரின் தேடுதலில் இளம்பெண் தீபா, புரோக்கர்களான தமிழ்ச்செல்வி, சங்கர், வேல்முருகன், கஸ்தூரி பாண்டி, முத்துலட்சுமி உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மனைவியாக நடிக்க ரூ.30 ஆயிரம்
அதன்படி சிவசண்முகத்தை ஏமாற்றிய திருமண மோசடி ராணியின் ஒரிஜினல் பெயர் ஜோதிமணி. இவரின் சொந்த ஊர் மதுரை பட்டத்து பகுதி என்பது தெரிய வந்துள்ளது. இவர் சிவசண்முகத்தை திருமணம் செய்து 3 நாட்கள் மனைவியாக நடிக்க புரோக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பணம் பெற்றிருக்கிறார். இதன்பின் பணத்தை பெற்றுக்கொண்டு சிவசண்முகத்தை திருமண மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
ஏமாற்றப்பட்ட 11 ஆண்கள்
அதுமட்டுமல்லாமல் ஜோதிமணி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 11க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் பறித்து மோசடி செய்திருக்கிறார். புரோக்கர்கள் மற்றும் ஜோதிமணியின் ஆசை வார்த்தைகள் நம்பி 11க்கும் மேற்பட்ட ஆண்கள் பணம், நகை, பொருளை இழந்திருப்பது விசாரணை தெரிய வந்துள்ளது. இதன்பின் ஜோதிமணி மற்றும் புரோக்கர்கள் 6 பேரையும் சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications