மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடியாக சரிவு.. நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தம்.. விவசாயிகள் கவலை

Subscribe to Oneindia Tamil

சேலம்: கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடியாக சரிவடைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதால் நாளை 8ஆம் தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்துள்ளது.

Mettur dam Water level dips to 32 feet Water shutdown for delta irrigation from October 10

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து விட்டது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் 32 அடியாக குறைந்துள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜூன் 30ஆம் தேதியன்று மொத்தம் 13,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், நீர்வரத்து தொடர்ந்து குறைந்ததால் விநாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.

அணையில் நீர் இருப்பும் குறைந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் நாளை 8 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதால் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்க மறுக்கிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை-யில் 101 அடி தண்ணீரும், கபிணி அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீரும் இருப்பு உள்ளது. கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாக கூறி தண்ணீர் திறந்து விட அடம் பிடிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது கர்நாடகா அரசு.
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் போராடத் தயாராகி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+