மேட்டூர் அணை நீர்மட்டம் 43 அடியாக சரிவு.. தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா.. டெல்டாவில் கருகும் பயிர்கள்
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 43 அடியாக சரிவடைந்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையும். அந்த தண்ணீர் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வந்து அந்த அணைகள் நிரம்பியதும் உபரி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும்.

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. 125 ஆண்டுகால வறட்சியை சந்தித்துள்ளதாக கூறி தமிழகத்தின் பங்கு தண்ணீரை திறந்து விட கர்நாடாக மறுத்து விட்டது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 2750 கனஅடியாக உள்ளது.
கடந்த ஆண்டு மேட்டூர் 400 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கும் குறையாமல் இருந்தது. பருவமழையை நம்பி நடப்பாண்டு ஜூன் 12ஆம் தேதி சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால் அணை நீர் மட்டம் மளமளவென சரிந்து தற்போது 43 அடியாக உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 43.16 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 300 கனஅடியாகவும் இருந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர் அணை வறண்டு காணப்படுகிறது. சுரங்கமின்பாதை வழியாக திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? என்று காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். இனி வரும் நாட்களில் வருண பகவான் கை கொடுத்தால் மட்டுமே விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications