பிரதமர் மோடி முன்பாக எந்த ஒரு தமிழனும் தலைகுனிந்து நிற்க விரும்பமாட்டான்... ராகுல் காட்டம்
சேலம்: பிரதமர் மோடி முன்பாக எந்த ஒரு தமிழனும் தலை குனிந்து நிற்க விரும்பமாட்டான்; ஆனால் ஊழல் செய்த காரணத்தால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி அமித்ஷா முன்பாக தலைகுனிந்து நிற்கிறார் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
சேலத்தில் இன்று திமுக கூட்டணி கட்சித் தலைவர்களின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள், பண்பாடுகள், மொழிகள், மதங்கள், சித்தாந்தங்களால் கட்டமைக்கப்பட்டது. தமிழ மொழி, பண்பாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொன்டிருப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது.
இதுதான் இந்தியா
தமிழர்களை தமிழர் பண்பாட்டை மதிக்காத நாடாக இந்தியா இருக்கவே முடியாது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தை மதிக்காத ஒரு நாடாக இந்தியா ஒருபோதும் இருக்கவே முடியாது.
அனைவரையும் சமமாக பார்த்தல்
இந்தியாவுக்கு என தனியே ஒரு ஒற்றை சிந்தனை இருக்கிறது என்பதை எல்லாம் ஏற்கவே முடியாது. தமிழரின் சிந்தனைகளை பண்பாட்டை ஏற்கும் அதேநேரத்தில் இந்தியாவின் இதர பண்பாடுகள், மொழிகளையும் நேசிக்கிறேன். அனைத்து மொழிகள், பண்பாடுகளை சரிசமமாகப் பார்க்க வேண்டும்.
முக கவசம் அணிந்த அதிமுக
பழைய அண்ணா திமுக என்பது எப்போதோ இறந்துவிட்டது. இப்போது இருக்கிற அதிமுக என்பது கொரோனா காலத்தில் நாம் அணிகிற முககவசம் போல ஒரு முக கவசம் அணிந்த கட்சி. இந்த முக கவசத்தை நீங்கள் கழற்றிப் பார்த்தால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். என ஒரு கலவையான முகம் இருக்கும். ஆர்.எஸ்.எஸ், பாஜகவினால் இயக்கப்படுகிற அதிமுகதான் இப்போது இருக்கிறது.
மோடி, அமித்ஷாவும் தமிழனும்
எந்த ஒரு தமிழனும் பிரதமர் மோடி முன்பாக தலைகுனிந்து நிற்க விரும்புவதில்லை. எந்த ஒரு தமிழனும் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் காலில் விழுவதை விரும்பமாட்டார்கள். ஆனால் தமிழக முதல்வர் அவர்களிடம் தலைகுனிந்து நிற்கிறாரே.. ஏன்? இப்படி தலை குனிந்து நிற்பதும் காலில் விழுவதும் தமிழரின் பண்பாட்டுக்கு எதிரானது அல்லவா?
விலை கொடுக்க வேண்டும்
தமிழக முதல்வர் தவறு செய்த காரணத்தால் மோடி, அமித்ஷா முன்னால் மண்டியிடுகிறார்கள். இதற்காக நீங்கள் நிச்சயம் விலை கொடுக்கத்தான் போகிறீர்கள். தமிழகத்தின் எத்தனையோ பிரச்சனைகளுக்காக ஒருமுறையேனும் பிரதம மோடி, அமித்ஷாவிடம் முதல்வர் கேள்வி கேட்டதுண்டா?
ஏன் தட்டி கேட்கவில்லை?
மோடியும் அமித்ஷாவும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அனுமதி கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர். மோடியும் அமித்ஷாவும் இந்த நாட்டையே நாசமாக்கி வருகின்றனர். இதை தட்டிக் கேட்க முடியாதவராக முதல்வர் இருக்கிறார். இந்தியாவின் உற்பத்தி தலைநகர் தமிழ்நாடு என்கிற அளவுக்கு சிறு, குறுதொழில்கள் நிறைந்த மாநிலம். ஆனால் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் மூலமாக இந்த தொழில்களை அழித்து பல லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை பறித்துவிட்டனர். இதை ஏன் என்று மோடியிடம் கேட்க முடியவில்லை. விவசாயிகளை வஞ்சிக்கும் விவசாய சட்டங்களை ஏன் கொண்டு வந்தீர்கள்? என இந்த மாநில முதல்வரால் மோடியிடம் கேட்க முடியவில்லை.
இதுதான் தமிழர் பண்பாடு
தமிழர்களைப் பொறுத்தவரையில் சிறிய அளவில் அன்பு, அக்கறை காட்டினாலே போதும்.. அதை நமக்கு பல மடங்காக திருப்பி கொடுப்பார்கள். தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெறுவதற்கு அன்பும் பாசமும்தான் தேவை. தமிழரின் இந்த பண்பாட்டு சிந்தனையை ஆர்.எஸ்.எஸ், மோடியால் புரிந்து கொள்ளவே முடியாது. தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின்தான் பொறுப்பேற்பார். ஸ்டாலினை முதல்வராக்க நீங்கள் எடுத்துள்ள முடிவுக்கு ஒப்புத தரக்கூடியதுதான் தேர்தல்.
இன்று தமிழகம் நாளை டெல்லி
தமிழகத்துக்குள் பாஜக, ஆர்,எஸ்.எஸ். ஆகியவற்றை நுழையவிடாமல் தடுத்துவிடலாம். ஆனால் ஆள் பலமும் பண பலமும் கொண்டவர்கள்.. மீண்டும் மீண்டும் தமிழகத்துக்குள் நுழையவே முயற்சிப்பார்கள். இதனை முறியடித்தாக வேண்டும். தமிழகத்தில் இருந்து முதலில் அவர்களை விரட்டியடிப்போம்.. பின்னர் டெல்லியில் இருந்து துரத்தியடிப்போம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.