வீரப்பன் மகள் வித்யாராணி VS பாமகவினர்.. மேட்டூரில் கடும் வாக்குவாதம்.. பரபரப்பு
சேலம்: மேட்டூர் அருகே வாக்களிக்க வந்த கிருஷ்ணகிரி நாம் தமிழர் வேட்பாளரும் வீரப்பனின் மகளுமான வித்யாராணியுடன் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் மாலை 6 மணியுடன் முடிவடைந்துவிட்டது. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குப் பதிவில் காலை முதலே அரசியல் கட்சியினர் வாக்களித்த வண்ணம் இருந்தனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இன்று மேட்டூருக்கு வாக்களிக்க வந்தார். குள்ளமுடையானூரில் தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்த அவர் வாக்குச் சாவடிக்கு அருகே காரை நிறுத்துவிட்டு இறங்கி நடந்துச் சென்றார்.
வித்யாராணியும் அவருடைய ஆதரவாளர்களும் வாக்குச் சாவடி மையத்திற்கு உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கு வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த பாமகவை சேர்ந்த பிரமுகர் கோவிந்தன், வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும் என கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை வெளியேறுமாறு கூறினார்.
இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு மோதல் ஏற்படும் சூழலும் நிலவியது. வாக்குச் சாவடியில் போலீஸார் இருந்த போதிலும் அவர்களுக்குள்ளான மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் ரோந்து பணியில் இருந்த போலீஸார் வரவழைக்கப்பட்டு பின்னர் வித்யாராணி வாக்களித்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போதும் வெளியே இருந்த பாமகவினருடன் வித்யாராணியின் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அங்கு கூடுதலாக வரவழைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இருந்து கார்களை வெளியே எடுக்கும் படி கூறியதை அடுத்து அங்கிருந்து அவர்கள் கிளம்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications