நகைக்காக இப்படியுமா?.. மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொன்று.. மூக்கு, காதை அறுத்து சென்ற கொடூரம்
சேலம்: நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கல்லால் தாக்கிக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மூதாட்டியின் காது மற்றும் மூக்கை அறுத்துச் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு, நாடுகளுக்கிடையேயான போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரசரவென்று உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் தங்கம் விலை 70 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், விலை உயர்வு காரணமாக தங்கம் அணிந்து கொண்டு வெளியில் செல்வதற்கே மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

நகைப் பறிப்பில் ஈடுபடும் நபர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து பறித்துச் செல்லும் சம்பவங்களே பெரும்பாலும் நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது நகைக்காக கொலை செய்யும் சம்பவங்கள் நிகழ்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மூதாட்டியின் காது மற்றும் மூக்கை அறுத்துச் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. 68 வயதான சரஸ்வதி சின்னேரிகாடு பகுதியில் விவசாயம் செய்வது மற்றும் மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். சரஸ்வதி தினந்தோறும் வனப் பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்துக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், சரஸ்வதி நேற்று காலை வழக்கம்போல மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் சரஸ்வதியை தேடி விவசாய நிலத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் சரஸ்வதி சடலமாகக் கிடந்துள்ளார்.
மூதாட்டியின் தலையில் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். சரஸ்வதியின் காது, மூக்கில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையுடன் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது யார், வெளிநபர்கள் ஊருக்குள் வந்து சென்றனரா என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல், சரஸ்வதியின் ஆடைகளும் களைந்த நிலையில் காணப்படுவதால் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications