'ஒரே நாடு, ஒரே தேர்தல்..' தமிழகத்தில் 2024இல் மீண்டும் சட்டசபை தேர்தல்.. பகீர் கிளப்பிய இபிஎஸ்
சேலம்: திமுக தேர்தல் அறிக்கையை என்றைக்கும் நிறைவேற்றியதாகச் சரித்திரம் இல்லை என்று தெரிவித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிரசாரம் குறித்து இன்னும் எதுவும் திட்டமிடவில்லை. 9 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாகத் தெரியவில்லை.

திமுக தேர்தல் அறிக்கை
திமுக, தேர்தல் அறிக்கையை என்றைக்கும் நிறைவேற்றியதாகச் சரித்திரம் இல்லை. முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வேன் என்று கூறிய ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. நாங்கள் போட்ட தீர்மானத்தையே அவர்களும் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக்கடன் கூட ரத்து செய்யவில்லை.

2024 சட்டசபைத் தேர்தல்
2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்படுகிறது. எனவே எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் 8 பேர் மட்டுமே மருத்துவ கல்வி பயின்ற நிலையில், 7.5 சத இட ஒதுக்கீடு அளித்ததால் 435 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து. அதே முறையை திமுக அரசும் பின்பற்றி இருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கு
திமுகவில் 13 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால், அது குறித்து யாரும் எதுவும் பேசுவதில்லை. அதிமுக குறித்து மட்டுமே ஊடகங்கள் பேசி வருகின்றன. 12 முன்னாள் அமைச்சர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்-னு நீங்க தான் செய்தி போடுகிறீர்கள், எங்களுக்கு ஒன்றும் வரவில்லை. ஆட்சியில் இருக்கும் போதும், இப்போதும் அதிமுகவை மட்டுமே குறிவைத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. மக்கள் பிரச்சினையை எடுத்துச் சொன்னால் யாரும் வெளியிடுவதில்லை.

விவசாயிகள் பிரச்சினை
நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதை யாரும் செய்தியாக வெளியிடுவதில்லை. ஒரு லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கின்றன. மழையில் நனைந்து வீணாகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்களாகி விட்டது. மக்கள் பிரச்சினைகளைக் கவனிக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யாமல் அதிமுக மீது புழுதி வாரித் தூற்றுவதையும் அவதூறு செய்வதையே திமுக அரசு செய்து வருகிறது" என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications