நேற்று சின்னசேலம்.. இன்று சேலம்! மீண்டும் ஒரு பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி - என்ன காரணம்?
சேலம்: அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் பள்ளி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் பள்ளி கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை முயற்சி
இன்று காலை பள்ளிக்கு வந்த அந்த மாணவி பள்ளியின் மேல் மாடிக்கு சென்று கீழே குதித்து இருக்கிறார். சத்தம் கேட்டு ஓடி வந்த சக மாணவிகள், மாடியிலிருந்து கீழே குதித்த மாணவியை கண்டு அலறி கூச்சல் எழுப்பினர். இதனையடுத்து அங்கு வந்த பள்ளி ஆசிரியர்கள் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதி
தற்கொலைக்கு முயன்ற மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி பலத்த காயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தகவலறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

விசாரணைக்கு உத்தரவு
பள்ளி மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்து இருக்கிறார். மாணவி நலமோடு இருப்பதாகவும், முதல் கட்ட விசாரணையில் பள்ளி சூழல் காரணமாகவோ, ஆசிரியர்களாலோ மாணவிக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறார்.

கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு
மாணவிக்கு உயர்மட்ட சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும், அவருக்கு உரிய கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், மாணவிக்கு சிறப்பு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகளை வழங்கி கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு தந்தை இல்லை என்றும் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்ததும் தெரியவந்திருக்கிறது.
Recommended Video

சின்ன சேலம் சம்பவம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 5 நாட்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த நிலையில் சேலம் மாணவி தற்கொலைக்கு முயன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications