வாழப்பாடியில் கேட்ட வினோத சத்தம்.. அலறி அடித்து தெருவுக்கு வந்த பொதுமக்கள்.. என்ன நடந்தது?
சேலம் அருகே லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
சேலம்: சேலம் அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பயத்தில் ஓடிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது நீர்முள்ளிக்குட்டை என்ற பகுதி.. இங்கு நேற்று மாலை திடீரென பெரும் சத்தம் கேட்டுள்ளது..
இந்த பகுதியில் இருக்கும் கடைகள், வீடுகளில் இருந்த கண்ணாடிகளில் ஒருவித அதிர்வு பிரதிபலித்துள்ளது. இதனால் நில அதிர்வு ஏற்பட்டதாக நினைத்து, மக்கள் வீட்டை விட்டு வெளியே அலறி அடித்து ஓடி வந்துள்ளனர்...
இடித்துரைக்கும் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத மன்னன் விரைவில் கெட்டழிவான்...சொல்கிறார் அண்ணாமலை
அதிர்வு
லேசான நில அதிர்வு ஏற்பட்டதோடு வீடுகளும், லேசாக குலுங்கியதாக தெரிகிறது. வீடுகளுக்குள் திடீரென சத்தம் பயங்கரமாக இருந்ததாக ஒருவருக்கொருவர் அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து, உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.. அதிகாரிகளும் விரைந்து வந்து இது சம்பந்தமான ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணை
பிறகு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய கருவிகளை சோதனையிட்டபோது, அப்படியான நில அதிர்வு எங்கும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.இதையடுத்து, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. அந்த காட்சிகளிலும் நில அதிர்வு போன்ற அறிகுறி எதுவும் தென்படவில்லை என்பது உறுதியானது.. ஆனால், சிசிடிவி கேமராவிலும் லேசான சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது..
சமாதானம்
இதற்கு பிறகுதான், அந்த வழியாக இரண்டு ஜெட் விமானங்கள் பெரும் சப்தத்துடன் பறந்துள்ளது என்றும், அதன் காரணமாகவே இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... இதனை அடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அப்பகுதி மக்கள் பீதி அடைந்திருப்பதோடு, அதிகாரிகள் நில அதிர்வு குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விநோத சத்தம்
இதனால் சேலம் மாநகரத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெட் விமானங்கள் எத்தனையோ முறை அந்த பகுதிகளில் பறந்து சென்று வந்திருக்கின்றன என்றாலும், இப்படி ஒரு சத்தம் என்றைக்குமே தங்களுக்கு கேட்டதில்லை என்றும், இது ஏதோ வினோதமான சத்தமாக இருந்ததாகவும் பதட்டம் விலகாமல் சொல்கின்றனர் அந்த பகுதி மக்கள்.. தொடர் விசாரணை நடந்து வருகிறது.