எஸ்.ஆர்.பார்த்திபன் சேலம் திமுக வேட்பாளர்: முதல்வர் மாவட்டத்தில் கெத்து காட்டுவாரா இவர்?
சேலம்: சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் எஸ்.ஆர்.பார்த்திபன்.
சேலத்தைச் சேர்ந்தவர் தான் எஸ்.ஆர்.பார்த்திபன் (49). வழக்கறிஞரான இவர், வீர வன்னியர் பேரவையில் இருந்து தேமுதிகவில் இணைந்தார். 2011ல் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் தேமுதிகவில் இருந்து வெளியே வந்த அவர் மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.
பின் அக்கட்சியைக் கலைத்து விட்டு, திமுக தலைவர் கருணாநிதி முன்பாக திமுகவில் இணைந்தார். தற்போது தேர்தல் பணிக்குழு செயலராக உள்ள இவரை, சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக்கி இருக்கின்றனர்.
ஜி.செல்வம் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர்: மீண்டும் வெற்றி வசப்படுமா?
சேலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டம் என்பதால் இங்கு வெற்றி பெறுவது என்பது ஆளும் கட்சிக்கு கௌரவப் பிரச்சனையாக உள்ளது. அதுமட்டுமல்ல 2009, 2014 தேர்தல்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்றிருப்பதால், ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கிறது.
சேலம் தொகுதியைப் பொறுத்தவரை வன்னியர் சமுதாயத்தவரே மெஜாரிட்டி. எனவே, அதே சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே திமுகவும், அதிமுகவும் களமிறக்கியுள்ளனர்.
நாமக்கல் எம்.பி.தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த போது, அத்தொகுதியின் சின்னச்சின்ன கிராமங்கள்தோறும் கூட்டங்களை நடத்தி, கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெற்று இப்போது சீட்டையும் பெற்றவர் பார்த்திபன். அதனால் எப்படியும் சேலத்தில் வெற்றிக் கனி பறிப்பார் என்பது அக்கட்சியினரின் நம்பிக்கையாக இருக்கிறது.