ஜொலிஜொலிக்கும் சேலம்.. திமுக இளைஞரணி மாநாடு.. முதல்வர் ஸ்டாலினிடம் "சுடர்" தரும் உதயநிதி.. வேற லெவல்
சேலம்: திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த மாநில உரிமை மீட்பு மாநாட்டு சுடரை, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை முதல்வரிடம் வழங்க உள்ளார்.
திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையத்தில் வரும் நாளை அதாவது 21-ம் தேதி நடக்கிறது. நாளை காலையில், 9 மணிக்கு கொடியேற்றத்துடன் இந்த மாநாடு துவங்குகிறது.

நாளை மாநாடு: பின்னர் மாலை 6.30 மணிக்கு, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுக்கு தலைமையேற்று உரையை நிகழ்த்துகிறார். இரவு 7.30 மணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நிறைவுரையாற்றுகிறார்.
நாளை மாநாட்டையொட்டி, இன்று மாலை, 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் புல்லட் பேரணி மாநாட்டு திடலில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்கிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் இன்று மதியமே சென்னையிலிருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைகிறார்கள்..
வரவேற்பு: சேலம் விமான நிலையம் உட்பட ஓமலூர், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வரை 65 கிலோமீட்டர் முதல்வருக்கு திமுகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு பெத்தநாயக்கன்பாளையம் மாநாடு நடைபெறும் இடத்தை முதல்வர் பார்வையிடுகிறார்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக இன்று மாலை இளைஞர் அணி மாநாடு திடல் வந்தடைய உள்ளது. இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் வழங்க உள்ளார்.
வாகனங்கள்: பிறகு, நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்டும் 1,500 இருசக்கர வாகனங்கள் பேரணி மாநாட்டு பந்தலுக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநாட்டு திடல் அருகில் ஒரு மணி நேரம் 1000 ட்ரோன்களை கொண்டு ட்ரோன் ஷோ (Drone Show) நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து முரசொலி புத்தக நிலையம், அன்பகம் திமுக இளைஞர் அணி வரலாறு சிறப்பு புகைப்பட கண்காட்சி நிலையம் உள்ளிட்டவைகளை திமுக தலைவர் திறந்து வைக்க உள்ளார்.

இந்த மாநாட்டில் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும்,மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. முதல்வரின் வருகையையொட்டி, 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஏற்பாடுகள்: முதல்வரை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் பெத்தநாயக்கன்பாளையம் வரை 20 அடிக்கு ஒரு மின் விளக்கு என 65 கிலோ மீட்டர் தூரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கொடி சாலையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ளது.
முதலில் உதயநிதி: இதுகுறித்து திமுக அமைச்சர் கேஎன் நேரு செய்தியாளர்களிடம் பேசும்போது, "இன்று மாலை 5 மணி அளவில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் விமானத்தில் சேலம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வந்து விடுகிறார்.
மாலை 6 மணி அளவில் மாநாட்டு சுடர் திடலை வந்தடைகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாடு திடலுக்கு வருகிறார்கள்.. 1500 பேர் பங்கேற்றுள்ள மோட்டார்சைக்கிள் பேரணி மாநாடு திடலை வந்தடைகிறது. 1000 டிரோன்கள் பங்கேற்கும் டிரோன் ஷோ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமார் 1 மணி நேரம் நடைபெறுகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
--












Click it and Unblock the Notifications