புகார் சொன்ன மாணவியையே பழி வாங்கினாரா தலைமை ஆசிரியை.. சேலத்தில் பெரும் தர்ணா
சேலம்: சேலம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாத்தியார்களை பார்த்தாலே ஊரில் ஓடி ஒளிந்த காலமெல்லாம் மலையேறி, இன்று தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவிகள் போராட்டம் நடத்தும் அளவுக்கு காலங்கள் மாறிவிட்டது. ஆசிரியர்களை எதிர்த்து பேசினால் நமது மதிப்பெண்களில் கைவைத்து விடுவார்களோ என்று அஞ்சியவர்கள் 90s கிட்ஸ். ஆனால் 2k கிட்ஸோ அதற்கு நேர் மாறானவர்கள் என்பது சேலத்தில் நடந்துள்ள நிகழ்விலிருந்தே அறிய முடிகிறது.

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லாததால் அது குறித்து தலைமை ஆசிரியையிடம் பலமுறை புகார் அளித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மாணவிகள் தர்ணா போராட்டத்தை நடத்தி கவனம் ஈர்த்துள்ளனர்.
தண்ணீரில் புழு வருவதாக தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தால், அந்த தண்ணீரை வீட்டில் இருந்து தானே எடுத்து வந்தாய் எனக் கேட்டு புகார் அளிக்க சென்ற மாணவியை திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் கழிவறை சுத்தமில்லாமல் இருப்பதாகவும் அது பற்றியும் புகார் தெரிவித்த போது தலைமை ஆசிரியை கண்டுகொள்ளவே இல்லை எனவும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்துள்ள தலைமை ஆசிரியை தமிழ்வாணி, தனக்கு எதிராக ஆசிரியர்கள் சிலர் மாணவிகளை போராட்டத்திற்கு தூண்டி விட்டுள்ளதாகவும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஏற்கனவே தாம் கல்வித்துறை அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதிகள் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் போலீஸார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வகுப்புகளுக்கு கலைந்து செல்ல வைத்தனர். சேலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்துள்ள இந்த நிகழ்வு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கவனத்திற்கும் சென்றிருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications