சென்னிமலை பெயரை ஏசுமலையாக மாற்றும் கோரிக்கையே பாஜகவின் சதிவேலை.. ஒரே போடாக போட்டு தாக்கிய சீமான்!
சேலம்: சென்னிமலை பெயரை ஏசுமலை என மாற்றும் கோரிக்கையே பாஜகவின் சதிவேலைதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னிமலையில் கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்புக்கும் இந்து முன்னணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது கிறிஸ்தவ முன்னணியினர், சென்னிமலையை ஏசுமலையாக மாற்ற வேண்டும் என பேசியதாகவும் கூறப்பட்டது.

சென்னிமலை முருகனின் புனிதத் தலம்; இதன் பெயரை ஏசுமலையாக மாற்றுவதா? என எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி அமைப்பினர் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே இந்து முன்னணி பொதுச்செயலாளர் செந்தில் குமார், கிறிஸ்தவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ராமகிருஷ்ணன் திடுக் ஆதாரம்: இதனிடையே இந்து முன்னணி செந்தில்குமார், கிறிஸ்தவ முன்னணி சரவணன் ஜோசப் இருவருமே கூட்டு சேர்ந்து இந்த நாடகத்தை நடத்தியதாகவும் இருவரும் இணைந்து இருக்கும் படங்களையும் தந்தை பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
பாஜக வேலை- சீமான்: இந்த நிகழ்வுகள் தொடர்பாக சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்த பதில்: சென்னிமலை பெயரை ஏசுமலையாக மாற்றும் கோரிக்கை என்பதை அவங்களே செய்வாங்க. பிஜேபிக்கு வேலையே இதுதானே.. அவங்க காரை அவங்களே தீ வைத்து கொளுத்திவிட்டு குண்டு போட்டாங்கன்னு சொல்றவங்க. அந்த மாதிரி நிறைய வேலை நடந்திருக்கு.
இஸ்லாம், கிறிஸ்தவத்தின் தன்மை: இஸ்லாம் கிறிஸ்தவம் எல்லாம் இங்க வந்தது. ஒன்னு ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். இஸ்லாம் ஒரு மார்க்கம். இஸ்லாம் நாட் எ ரிலீஜன். ரெவல்யூசன். பழனிபாபா அண்ணன் திரும்ப திரும்ப இதைத்தான் சொல்கிறார். ஐரோப்பா, அரேபியாவில் தோன்றிய மதங்கள் உலகம் முழுவதும் பரவக் காரணம், அதில் இருக்கக் கூடிய குறைந்தபட்ச சகோதரத்துவம், சமத்துவம்.
இந்து மததத்தின் தன்மை: எங்கள் நிலத்தில் தோன்றிய பவுத்தம்- புத்த மதம் உலகம் முழுவதும் பரவ காரணம் அதில் இருக்கக் கூடிய சகோதரத்துவம், சமத்துவம். இங்க இருக்கிற இந்து மதம் உலக அளவில் பரவாமல் போகக் காரணம், அதில் இருக்கிற சமத்துவமின்மை; சகோதரத்துவமின்மை, தீண்டமை, ஜாதிய இழிவு.

யார் இந்து என்கிற கேள்வி?: நாங்கள் இந்துவா, சரித்திரப்படி இந்துவா? வெள்ளைக்காரன் போட சட்டப்படி இந்துவா? என்பதுதான் கேள்வி. நாங்கள் சைவர்கள். சிவனை வழிபடுகிறவர்கள். திருமாலை, பெருமாளை வணங்குகிற மாலியம்- வைணவம் என்பது சமஸ்கிருத சொல். நாங்க முருகனை வழிபடுகிற சைவம். அதிலும் வீர சைவர்கள். அதுதான் எங்கள் சமயம். வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தில பவுத்தன், சீக்கியன், சமணன், சைவன், வைணவன் எல்லாம் இந்து என்றாகிவிட்டான். எவன் பார்சி இல்லையோ, எவன் ஆங்கிலோ இந்து இல்லையோ எவன் கிறிஸ்தவன் இல்லையோ எவன் முஸ்லிம் இல்லையோ அவன் எல்லாம் இந்து என கையெழுத்து போட்டது ஆங்கிலேயர். அதனால் நாங்கள் இந்துவாகிவிட்டோம்.
வேடிக்கையாக இல்லையா?: அப்படி இருக்கும் போது சென்னிமலை- கிறிஸ்தவமலை என்பதெல்லாம் வேடிக்கையாக இல்லையா? தமிழ் இறை முருகன் என்பது உங்களுக்கு தெரியுது. அதை எதிர்த்து பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications