சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
சேலம்: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில், ஓட்டுபோடுவதற்காக வரிசையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து சேலத்தை சேர்ந்த இருவர், திருத்தனியை சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளதாக தலைமை தேர்தல ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில், முதல் கட்டமாக இன்று தேர்தல் தொடங்கியது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு போட்டு வருகின்றனர்.

11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் செந்தாரப்பட்டியில் உள்ள 250வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க சென்ற ஒருவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு ( வயது 77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் சின்னப்பொண்ணு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரது உயிரிழப்புக்கு என்ன காரணம்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதேபோல், சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், திருத்தணியை அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (59) என்ற முதியவரும் வாக்கு செலுத்துவதற்காக வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வாக்களிக்க வரிசையில் நின்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "சேலத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பந்தல், வாக்காளர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, வாக்காளர்கள் தங்களது உடல் நலனை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல் வாக்களிப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இதேபோல், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், மருத்துவத் துறைக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.
ஏகனாபுரம் கிராமம் உள்பட ஒருசில இடங்களில் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து ஓட்டுப்போடாமல் இருந்து வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சத்யபிரதா சாகு, "எல்லா மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம். அவர்கள் அந்தந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை வாக்களிக்க செய்ய கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications