இ.பி.எஸ். கோட்டையில் கால் வைத்த ஸ்டாலின்.. சேலத்தில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
சேலம்: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாளை மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சேலம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அவரை வரவேற்க விமான நிலையத்தில் குழுமினர். இதனை தொடர்ந்து சேலம் தீவட்டிப்பட்டியில் கூடியிருந்த பொதுமக்களிடம் கையசைத்துவிட்டு தொப்பூர் வழியாக மேச்சேரிக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கிருந்து மேட்டூருக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சரின் சேலம் பயணத்தை முன்னிட்டு 3,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டாலினின் வருகைக்காக அவரது கான்வாய் செல்லும் சாலை நெடுகிலும் அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.