இயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம்
சேலம்: சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என கூறியுள்ள தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியும், முதல்வர் இவ்வாறு தொடர்ந்து பேசி வருவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என குறிப்பிட்டுள்ளனர்.

சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் தனிநபருக்கானது அல்ல. மக்களின் வசதிக்காக தான் அமைக்கப்படும். உலக தரத்தில் சாலைகளை அமைக்கவே மத்திய அரசு, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்காக யாருடைய நிலத்தையும் பறித்து அரசு செயல்படுத்தாது. 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் மக்களை சமாதானப்படுத்தி, உண்மை நிலவரத்தை எடுத்துரைத்து, பின்னர் தான் இத்திட்டம் நிறைவேற்றப்படும். ஆனால் இத்திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார்
முதல்வரின் இந்த பேச்சுக்கு 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காஞ்சிபுரம் திருவண்ணாமலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என, தமிழக அரசு பிடிவாதம் பிடிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு இருக்கும் சாலையை விரிவுபடுத்துவதை விட்டு, உலகத்தரத்தில் சாலை அமைக்க போவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே 8 வழிச்சாலையை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் துடிக்கின்றன என்று சாடியுள்ளனர்.
மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி கமிஷனுக்காகவே இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார் முதல்வர் பழனிசாமி. 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏராளமான குளங்கள், நீர் நிலைகள், விளைநிலங்கள் மற்றும் காடுகள் அழிந்து விடும். இப்படி இயற்கை வளங்களையெல்லாம் அழித்து உலகத்தரத்தில் ஒரு சாலையை மக்களோ, விவசாயிகளோ கேட்கவில்லையே.
அனைவரும் ஒட்டு மொத்தமாக இத்திட்டத்தை புறக்கணிக்க தானே சொல்கிறோம். ஆனால் மக்கள் குரலை எதிரொலிக்கும் அரசாக ஆளும் அதிமுக அரசு செயல்படவில்லை. மாறாக இத்திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி கொடுத்து விட்டு, காசு வாங்கி பையை நிரப்பிக் கொள்ளவே இந்த அரசு காத்திருப்பதாக ஆவேசமுடன் கூறியுள்ளனர்.
இன்னும் சாலை வசதிகள் இல்லாத எத்தனையோ பகுதிகள் நாட்டிலும், தமிழகத்திலும் உள்ளன. அங்கெல்லாம் சாலை வசதிகளை செய்து தருவதை விட்டுவிட்டு, இயற்கை வளங்களை சூறையாடி உலகத்தரத்தில் சாலைகள் அமைப்பது மக்களுக்காகவே என மத்திய மற்றும் மாநில அரசுகள் கூறுகின்றன. இதனை ஏற்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல என கூறியுள்ளனர் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications