கட்சியை உடைக்க பார்க்கிறார்கள்..100% ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பில்லை..முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்
சேலம்: கட்சியை உடைக்க வேண்டும், பிளக்க வேண்டும் என்று செயல்படுவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள் என்றும் 100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை இந்த தமிழக அரசு வேகமாக துரிதமாக நிறைவேற்றினால் விலைமதிக்க முடியாத உயிரை காப்பாற்றலாம். அதை இந்த அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

வருந்தத்தக்கது
முக்கிய பொறுப்பில் இருக்கின்றவர்கள், அதுவும் மூத்த அமைச்சராக இருக்கின்றவர் பொதுக்கூட்டத்தில் இப்படிப்பட்ட கருத்தை வெளியிடுவது வேதனைக்குரியது. ஏழை எளிய பெண்கள்தான் கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள். அதை கொச்சப்படுத்தி பேசுவது சரிஅல்ல. இது வருந்தத்தக்கது. இப்படித்தான் பல திராவிட அமைச்சர்கள் மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

நிர்வாக திறமையற்ற முதல்வர்
மழை நீர் வடிகால்கள் பல இடங்களில் முடியாமல் உள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, நிர்வாக திறமையற்ற முதல்வர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அது நிரூபணம் ஆகியிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை மழைக்காலங்களில் பணிகளை செய்தால் கனமழையின் போது ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்படுவார்கள்.

எதிர்க்கட்சியாக இருக்கிறது
இதையெல்லாம் சரியாக முறையாக கடைப்பிடிக்காதத காரணத்தால் சென்னையில் பலவேறு வீதிகளில் பள்ளத்தை தோண்டிவிட்டு அந்த பணியை தொடராமல் இருப்பது வேதனைக்குரியது. இந்த பணியை திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க வேண்டும். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக வலிமையாக இருக்கிறது. 33 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது.

100 சதவீதம் வாய்ப்பு இல்லை
சிலபேர் வேண்டும் என்றே திட்டமிட்டு சிலபேரின் தூண்டுதலின் பேரிலே இந்த கட்சியை பிளக்கவோ உடைக்கவோ பார்க்கின்றார்கள். அது ஒருபோதும் நடக்காது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கிறது. விசாரணை விரைவில் முடியும். விசாரணை முடிந்த பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். கட்சியை உடைக்க வேண்டும் பிளக்க வேண்டும் என்று செயல்படுவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள். 100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications