சேலத்தில் முதல்வர் எடப்பாடியாருடன் ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் திடீர் ஆலோசனை - பரபர அதிமுக
சேலம்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் திடீரென ஆலோசனை நடத்தி இருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அமைச்சர்கள் தொகுதிகளில் அதிக அளவு வாக்குகள் பதிவாகி இருந்தன. சில அமைச்சர்களின் தொகுதிகளில் 76% முதல் 85% வரை வாக்குகள் பதிவாகி இருந்தன.

அதிக வாக்குகள் பதிவு
அமைச்சர்கள் தொகுதிகளில் மட்டுமே எப்படி அதிக வாக்குகள் பதிவானது என்பது தொடர்பாக அதிமுக தலைமையும் ஆச்சரியமடைந்துள்ளது. திமுகவும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

சேலத்தில் அமைச்சர்கள்
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், உதயகுமார், எம்.சி. சம்பத், கே.சி. வீரமணி ஆகியோர் நேற்று திடீரென சேலம் சென்றனர்.

எடப்பாடியாருடன் ஆலோசனை
சேலத்தில் தங்கி உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது வாக்கு பதிவு எப்படி அதிகமாக விழுந்தது? இது சாதகமா? பாதகமா? என்பது தொடர்பாக முதலில் விவாதிக்கபட்டதாம்.

ஊழல் வழக்குகளா?
அடுத்ததாக ஒருவேளை திமுக ஆட்சி அமைத்தால் ஊழல் வழக்குகளை தொடரத்தான் செய்வார்கள். இந்த ஊழல் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி? என்பது தொடர்பாகவும் முதல்வருடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினராம். அப்போது சில அமைச்சர்கள் ரொம்பவே கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்களாம்.

ப்ளான் போட்டு தந்த சுனில் டீம்
இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, திமுகவுக்கு எப்படி பிரஷாந்த் கிஷோர் இருக்கிறாரோ அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சுனில் டீம் தீயாக வேலை செய்கிறது. இந்த சுனில் டீம் ஆலோசனைப்படிதான் சசிகலாவை கட்சியிலேயே சேர்க்க கூடாது என முடிவெடுத்தாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தற்போதும் அடுத்த கட்டமாக என்னென்ன முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு கொடுத்துள்ளதாம் சுனில் டீம் அதன்படிதான் இந்த ஆலோசனை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications